நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு 'சம்மன்'
நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு 'சம்மன்'
ADDED : ஏப் 15, 2024 12:57 AM
சென்னை: தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், 3.99 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியது தொடர்பாக, பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட, எட்டு பேருக்கு போலீசார் 'சம்மன்' வழங்கி உள்ளனர்.
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் கட்டு கட்டாக பணம் கடத்தப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, சமீபத்தில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், சென்னையை சேர்ந்த சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பெருமாள் ஆகியோரிடம் இருந்து, 3.99 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இந்தப்பணம், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, நெல்லை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சதீஷ் மற்றும் நவீன் ஆகியோர், அந்த ஹோட்டல் ஊழியர்கள். பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் எனவும், இந்த பணம் நெல்லையில் ஒருவரிடம் ஒப்படைக்க இருந்ததாகவும், வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, சென்னை மற்றும் நெல்லையில் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய கூட்டாளிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில், சென்னை பசுமை வழிச்சாலையை சேர்ந்த கோவர்த்தன் என்பவருக்கு, தாம்பரம் உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் 'சம்மன்' அனுப்பினர்.
அவரது மகன் கிஷோர் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அதேபோல, இந்த பண விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட எட்டு பேருக்கு நேற்று 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.

