ADDED : மே 25, 2024 03:18 PM

சென்னை: பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட, 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' என்ற பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் மூன்று பேரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இன்று (மே 25) மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் டாக்டர் ஹமீது உசேன்; பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர். சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றியுள்ளார். 'ஹிஸ்ப்- உத்- தஹ்ரீர்' இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு உள்ளார். இவரது தந்தை அகமது மன்சூர் மற்றும் இளைய சகோதரர் அப்துல் ரகுமான்.
இவர்கள் சென்னை ராயப்பேட்டை ஜான்ஜானிகான் சாலையில், 'மாடர்ன் எசன்சியல் எஜுகேஷனல் டிரஸ்ட்' என்ற பெயரில், ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அதன் வாயிலாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஹிஸ்ப்- உத்- தஹ்ரீர் இயக்க கொள்கைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்துள்ளனர்.
மேலும், 'டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்' என்ற,' யு டியூப்' சேனல் வாயிலாகவும் கருத்துக்களை வெளியிட்டு வந்து உள்ளனர். இதை தீவிரமாக கண்காணித்து வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து மூவரையும் நேற்று கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (மே 25) தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் உத் தஹ்ரிர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைதான நிலையில் மேலும் 3 பேரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

