ADDED : மே 06, 2024 11:39 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 53. இவரது மனைவி செந்தாமரையின் பூர்வீக சொத்தை பாகப்பிரிவினை செய்து பட்டா மாறுதல் வழங்க, ஆன்லைனில் விண்ணப்பம் செய்திருந்தார்.
ராமநாதபுரம் தாலுகா சர்வேயராக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சிவா, 35, என்பவரிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்க, திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். ஆவணங்களை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப, 3,500 ரூபாய் லஞ்சம் வேண்டும் என சிவா கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத திருநாவுக்கரசு, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரனிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை திருநாவுக்கரசிடம் கொடுத்தனர்.
திருநாவுக்கரசு, சர்வேயர் சிவாவை தொடர்பு கொண்டு, பணத்தை தருவதாக கூறினார். அதற்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, இ - சேவை மையத்திற்கு வருமாறு சிவா தெரிவித்தார். அங்கு, சிவாவிடம் ரசாயனம் தடவிய பணத்தை வழங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.