இலங்கையில் 15 அமைப்புகளுக்கு தடை தமிழக கடலோர போலீசார் உஷார்
இலங்கையில் 15 அமைப்புகளுக்கு தடை தமிழக கடலோர போலீசார் உஷார்
ADDED : பிப் 24, 2025 02:26 AM
சென்னை: இலங்கையில், 15 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக கியூ பிரிவு மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில், தமிழர் புனர்வாழ்வு, தமிழர் ஒருங்கிணைப்பு குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழக அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம், தலைமையக குழு, தேசிய தவுஹீத் ஜமாத் உள்ளிட்ட, 15 அமைப்புகளுக்கு, கடந்த 20ம் தேதி, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
அந்த அமைப்புகளை சேர்ந்த, 222 பேரை தேடி வருவதாகவும் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து, கியூ பிரிவு மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு, தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மற்றும் தலைமறைவாக இருக்கும் நபர்கள் குறித்த விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர், கடல் வழி மார்க்கமாக தமிழகத்திற்கு தப்பி வரக்கூடும் என்பதால், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் கியூ பிரிவு போலீசார், கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

