மத்திய அமைச்சர் மன்னிப்பு கோர ஐகோர்ட்டில் தமிழக அரசு வலியுறுத்தல்
மத்திய அமைச்சர் மன்னிப்பு கோர ஐகோர்ட்டில் தமிழக அரசு வலியுறுத்தல்
ADDED : ஆக 07, 2024 09:11 PM
சென்னை:'பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே, செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பெங்களூரு, 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில், கடந்த மார்ச்சில் குண்டு வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக, கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே, 'தமிழகத்தில் பயற்சி பெற்று வருவோர், இங்கு வெடிகுண்டுகள் வைக்கின்றனர்' என்றார்.
அவருக்கு எதிராக, மதுரையை சேர்ந்த தியாகராஜன் என்பவர் அளித்த புகாரின்படி, வன்முறையை துாண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ், மதுரை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷோபா கரண்ட்லாஜே மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''செய்தியாளர் சந்திப்பை நடத்தி, மனுதாரர் தன் பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும். இனி அப்படி பேச மாட்டேன் என தெரிவித்தால், வழக்கு பதிவை ரத்து செய்யலாம்,'' என்றார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, 'செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோரினால் தான் சரியாக இருக்கும்' எனக் கூறியதுடன், அதுகுறித்து விபரங்களை கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 16க்கு தள்ளிவைத்தார்.