புத்தகம் வாங்கிய தமிழக பாடநுால் நிறுவனம் நுாலாசிரியருக்கு பணம் தராமல் இழுத்தடிப்பு
புத்தகம் வாங்கிய தமிழக பாடநுால் நிறுவனம் நுாலாசிரியருக்கு பணம் தராமல் இழுத்தடிப்பு
ADDED : மார் 08, 2025 12:21 AM
சென்னை:புத்தகங்கள் வாங்கிய தமிழக பாடநுால் நிறுவனம், நுாலாசிரியருக்கு உரிய தொகையை தராமல், இரண்டாண்டுகளாக இழுத்தடிப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி கணிதப் பேராசிரியர் சிவராமன். இவர், கணித வல்லுநர்களை இணைத்து, 'பை கணித மன்றம்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
இதன் வாயிலாக, அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களுக்கு எளிமையாக கணிதம் கற்பிக்கும் பணியை செய்கிறார். மேலும், கணித கருத்தரங்குகளில் பங்கேற்று, சிக்கலான கணக்குகளுக்கான சூத்திரங்களை எளிமையாக விளக்குவது உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபடுகிறார்.
மேம்பட்ட மற்றும் அடிப்படை கணிதத்தின் தத்துவங்கள், வழிமுறைகள் உள்ளிட்டவற்றை, பத்திரிகைகளில் தமிழ் வழியில் தொடராக எழுதியும், புத்தகங்களை அச்சிட்டும் வருகிறார்.
இவரின், 'இயற்கையில் கணிதம்' என்ற நுாலை, தமிழக அரசு பாடநுால் கழகம் தாமாக தேர்வு செய்து, 55 மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு வழங்கும்படி கோரியது. அதை ஏற்று, அவர் 2023ல், அவர்கள் தந்த முகவரிக்கு, இரண்டு லட்சத்து, 80,000 ரூபாய் மதிப்புள்ள, 3,130 பிரதிகளை அனுப்பினார்.
புத்தகங்களை அனுப்பிய அடுத்த ஆண்டு, முதல் தவணையாக, ஒரு லட்சத்து, 75,846 ரூபாயை பாடநுால் நிறுவனம் வழங்கியது. மீதித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, பேராசிரியர் சிவராமன் கூறியதாவது:
பாடநுால் நிறுவனத்துக்காக, புதிய பாடப்புத்தகங்கள் வடிவமைக்கும்போது பலமுறை பங்களித்துள்ளேன்.
அவர்களாகவே, எங்களை தொடர்பு கொண்டு, கணிதத்தை எளிதாகக் கற்பிக்கும் வகையில், உங்கள் புத்தகங்கள் உள்ளன. அவற்றை பள்ளி நுாலகங்களுக்கு தர வேண்டும் என, 3,130 பிரதிகள் கேட்டனர்.
நானும் அறக்கட்டளை வாயிலாக நிதியை பெற்று, அடக்கவிலையில் நுால்களை உரிய நேரத்தில், தரமான தாளில் அச்சிட்டு, அவர்கள் தந்த முகவரிகளுக்கு அனுப்பினேன். இரண்டாண்டுகளான நிலையில், 40 சதவீத தொகையை இதுவரை பெற முடியவில்லை.
இதற்காக, பலமுறை, பாடநுால் நிறுவனத்துக்கு நேரில் சென்றும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகொண்டும், சரியான பதில் இல்லை.
இதுகுறித்து, பதிப்பகங்களிடம் விசாரித்த போது, எனக்கு பின் புத்தகங்கள் வழங்கிய பதிப்பகங்களுக்கான தொகை கிடைத்து விட்டதாகவும், அவர்கள் குறிப்பிட்ட தொகையை அதிகாரிகளுக்கு கமிஷனாக தந்ததாகவும் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.