ADDED : மார் 01, 2025 01:47 AM
சென்னை: செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர் சேட்டு என்ற பாலாஜி, 19. இவர், கடந்த 2017, மே 26ல், தன் இருசக்கர வாகனத்தில், சேத்துப்பட்டு அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த போலீஸ்காரர் பிரவீன்குமார், சேட்டுவை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த சேட்டு, நான்கு நாட்களுக்கு பின், மே 30ல், சேத்துப்பட்டு நமச்சிவாயபுரம் பாலம் அருகே, பணியில் இருந்த பிரவீன்குமாரை, கத்தி, இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த பிரவீன்குமார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுதொடர்பாக, பிரவீன்குமார் அளித்த புகாரின்படி, சேட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, 19வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சேட்டு மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமானதால், இரண்டு ஆண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.