உத்தரவை மீறி 'மெட்ரோ' பணிகள் ஆலய வழிபடுவோர் சங்கம் புகார்
உத்தரவை மீறி 'மெட்ரோ' பணிகள் ஆலய வழிபடுவோர் சங்கம் புகார்
ADDED : ஜூலை 25, 2024 01:02 AM
சென்னை:''சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, சென்னை ராயப்பேட்டை, ஒயிட்ஸ் சாலையில் உள்ள ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கையம்மன் கோவில் ராஜகோபுரம் அமைந்துள்ள இடத்தில் மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொண்டுள்ளனர்,'' என, ஆலய வழிபடுவோர் நல சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் தெரிவித்தார்.
சென்னை மெட்ரோ திட்டத்தின் இரண்டாம்கட்ட பணிகளுக்காக, சென்னை ராயப்பேட்டை, ஒயிட்ஸ் சாலையில், நுாற்றாண்டுகள் பழமையான ஸ்ரீ ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ராஜகோபுரத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையைச் சேர்ந்த ஆலயம் காப்போம் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.ரமணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில்,'கோவில் முன் வரும் மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயிலை, வேறு இடத்தில் அமைக்க சாத்தியக்கூறு இருக்கிறதா? என அறிய, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில், 'இந்த கோவில், 1895ல், சென்னை நில அளவை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.
'கோவில் நுாற்றாண்டுக்கு மேல் பழமையானது. கோவிலை சுற்றி 'ட்ரில்லிங்' பணி நடந்து வருகிறது. இதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என தெரிவிக்கப் பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், நிபுணர் குழுவின் அறிக்கையை, மெட்ரோ ரயில் நிர்வாகம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 30க்கு தள்ளிவைத்தனர்.
இது குறித்து, ஆலய வழிபடுவோர் நல சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:
உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மெட்ரோ ரயில் நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கோவில் உண்டியல் பணத்தை வசூல் செய்ய வரும் ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ராயப்பேட்டை ரத்ன விநாயகர் கோவிலை பாதுகாக்க, அரசு அல்லது நீதிமன்றம் வாயிலாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

