தமிழகத்தில் புதிதாக அமையும் 17 மினி ஜவுளி பூங்காக்கள் துணிநுால் துறை அமைச்சர் தகவல்
தமிழகத்தில் புதிதாக அமையும் 17 மினி ஜவுளி பூங்காக்கள் துணிநுால் துறை அமைச்சர் தகவல்
ADDED : மார் 05, 2025 12:53 AM

திருப்பூர்:''தமிழகம் முழுதும் 17 மினி டெக்ஸ்டைல் பார்க் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,'' என, திருப்பூரில் டெக்ஸ்டைல் பார்க்கை திறந்து வைத்து, அமைச்சர் காந்தி பேசினார்.
திருப்பூரில் பின்னலாடை துறை சார்ந்த மூன்று நிறுவனங்கள் இணைந்து, 16.87 கோடி ரூபாய் மதிப்பில், வீரபாண்டி பகுதியில், மினி டெக்ஸ்டைல் பார்க்கை உருவாக்கியுள்ளன.
தமிழக அரசின் துணிநுால் துறையின் மினி டெக்ஸ்டைல் பூங்கா திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டமைப்புக்கு, 2.50 கோடி ரூபாய் மானியத்தை அரசு வழங்கியுள்ளது.
மினி டெக்ஸ்டைல் பார்க்கை திறந்து வைத்து, அமைச்சர் காந்தி பேசியதாவது:
மினி டெக்ஸ்டைல் பார்க் திட்டத்தில், 2 ஏக்கர் நிலப்பரப்பில், குறைந்தபட்சம் மூன்று ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் தொழில் கூடங்கள் அமைக்க வேண்டும். பூங்கா அமைக்க, திட்ட மதிப்பீட்டில், 50 சதவீதம் அல்லது 2.50 கோடி ரூபாய். இவற்றில் எது குறைவானதோ அந்த தொகை, அரசு மானியமாக வழங்கப்படுகிறது.
கடந்த 2015ல், மினி டெக்ஸ்டைல் பார்க் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், எந்த தொழில் நிறுவனங்களும் விண்ணப்பிக்கவில்லை.
இது குறித்து ஆராய்ந்தபோது, அரசு வழங்கும் 2.50 கோடி ரூபாய் மானியத்தை, உள்கட்டமைப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற விதிமுறையே, மிகப்பெரிய தடைக்கல்லாக இருந்தது தெரியவந்தது.
இது முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நிறுவனங்கள் மானியத் தொகையை இயந்திரங்கள் வாங்குவது உள்பட பல்வேறு தேவைக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என, விதிமுறை தளர்த்தப்பட்டது.
இதனால், ஒரே மாதத்தில், 100 நிறுவனங்கள் மினி டெக்ஸ்டைல் பார்க் திட்டத்தில் தொழிற்கூடங்கள் அமைக்க விண்ணப்பித்தன.
அவ்வகையில், முதல்கட்டமாக தமிழகம் முழுதும், 17 மினி டெக்ஸ்டைல் பார்க் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரூரில் 8, திருப்பூர் மாவட்டத்தில், 5 மினி டெக்ஸ்டைல் பார்க் அமைகின்றன. திருப்பூரில் முதல் மினி டெக்ஸ்டைல் பார்க் தற்போது திறக்கப்பட்டு, செயல்பாட்டை துவக்கியுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.