ஜாபர் சேட்டுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு ரத்து
ஜாபர் சேட்டுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு ரத்து
ADDED : ஆக 22, 2024 02:16 AM
சென்னை:சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிக்கு எதிராக, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2006 - 11ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின்போது, சென்னை, திருவான்மியூரில் வீட்டுவசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாக பெற்றதாக, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவிக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில், ஜாபர் சேட், அவரது மனைவிக்கு எதிராக, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், 2020ல் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஜாபர் சேட் மனுத் தாக்கல் செய்தார். மனுவில், 'எனக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு, ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டது. என் மனைவிக்கு எதிராக, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கும் ரத்தாகி விட்டது. எனவே, எனக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கையும், ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டது.
மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஜாபர் சேட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவகாசம் கோரினார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ''மனுதாரருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கை, 2019ல் உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டது.
அந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்ததால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அதை ரத்து செய்யலாம்,'' என்றார்.
இதை ஏற்றுக்கொண்டு, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை, நீதிபதிகள் ரத்து செய்தனர்.