ADDED : ஜூன் 04, 2024 01:43 AM

சாத்தான்குளம்: துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழி பஞ்சாயத்து சாமிதோப்பு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி விமலா, 45. கூட்டு பட்டாவில் உள்ள தன் வீட்டுக்கு தனிப்பட்டா கேட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இதுவரை பட்டா வழங்காத நிலையில், சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன் உறவினர்களுடன் விமலா நேற்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் அவரிடம் பேச்சு நடத்தி, அவரை சமரசப்படுத்தினர்.
விமலா கூறியதாவது:
அதிகாரிகள் தனிப்பட்டா தராமல் இழுத்தடித்த நிலையில், பட்டா பெற்று தருவதாக கூறி, அலுவலக புரோக்கர் ஒருவர் 55,000 ரூபாய் வாங்கினார். அவரும் தற்போது வரை பட்டா எடுத்து தரவில்லை. எனக்கு தனிப்பட்டா தருவதற்கு எந்த பணிகளும் இதுவரை நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.