மதுரையில் இருந்து கிளம்பியது கார்த்திக் கோவில் யாத்திரை ரயில்
மதுரையில் இருந்து கிளம்பியது கார்த்திக் கோவில் யாத்திரை ரயில்
ADDED : ஜூன் 21, 2024 09:44 PM

மதுரை:இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., சுற்றுலா பிரிவு சார்பில், 'கேதார் - பத்ரி - கார்த்திக் சுவாமி எனும் முருகன் கோவில் யாத்திரை செல்லும், பாரத் கவுரவ் எக்ஸ்பிரஸ் சிறப்பு சுற்றுலா ரயில் மதுரை கூடல்நகரில் இருந்து ரிஷிகேஷிற்கு புறப்பட்டது.
இப்பயணம் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை வழியாக, நாளை(23.06.2024) காலை 7:10 மணிக்கு ரிஷிகேஷ் சென்றடைகிறது. 14 பெட்டிகள் கொண்ட இச்சிறப்பு ரயிலில், மொத்தம் 170 பயணியர் செல்கின்றனர்.
ரிஷிகேஷ், ருத்ரபிரயாக், குப்தாகாஷி, கேதார்நாத், ஜோஷிமாத், பத்ரிநாத் ஆகிய இடங்கள் இப்பயணத்தில் இடம் பெறுகின்றன. முழுதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில், பயணியருக்கு இலவச சைவ உணவு மூன்று வேளையும் வழங்கப்படும்.
இந்தியன் ரயில்வே தென் மண்டல குழு பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு கூறும் போது, ''ஐ.ஆர்.சி.டி.சி., மற்றும் உத்தரகண்ட் மாநில சுற்றுலா வாரியம் இணைந்து, இந்த சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து 70 பேர் இப்பயணத்தில் பங்கேற்கின்றனர்,'' என்றார்.
பயணி திலகவதி நாச்சியார்: மூன்றாவது முறையாக இப்படியான ஓர் சுற்றுலாவிற்கு தனியாக பயணிக்கிறேன். முதியோர் என்பதால் பயணத்தின் போது முக்கியமாக கருதப்படுவது பாதுகாப்பு. மேலும் காப்பீடு உள்ளடங்கியுள்ளதால் எவ்வித அச்சமும் இன்றி பயணிக்க வசதியாக உள்ளது.
பயணி லட்சுமி: இப்பயணத்தின் தகவலை, தினமலர் நாளிதழில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். ரயிலில் உணவு, காப்பீடு என அனைத்து வசதிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியாக செல்ல வேண்டுமென்றால் செலவு இதை விட பல மடங்கு அதிகமாகும். ஹெலிகாப்டரில் பயணிப்பது, ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோவிலுக்கு செல்வதில் ஆவலாக உள்ளோம்.
இந்த ரயிலில் செல்லும் பயணியர், குப்தாகாஷியில் இருந்து கேதார்நாத்திற்கு ஹெலிகாப்டரில் அழைத்துச்செல்லப்படுவர். பின் அங்கிருந்து ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோவிலில் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

