ADDED : மார் 11, 2025 04:38 AM

முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தன்னை மன்னர் என எண்ணிக்கொண்டு, ஆணவத்துடன் பேசும், மத்திய கல்வி அமைச்சர் பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழகத்தின் நிதியை தராமல் ஏமாற்றும் மத்திய அமைச்சர், தமிழக எம்.பி.,க்களை பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா. தமிழக மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதை ஏற்கிறாரா?
தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை, தமிழக அரசு அனுப்பிய, பிஎம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தம் முற்றிலுமாக நிராகரித்து விட்டது என, எனக்கு கடிதம் எழுதியது நீங்கள் தானே. நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம். உங்களை போல நாக்பூரின் சொற்களுக்கு கட்டுப்பட்டு அல்ல.
நாங்கள் உங்கள் திட்டத்தை செயல்படுத்த முன்வரவும் இல்லை. அப்படி முன்வராத என்னை, யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழக மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா, முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.