பாலியல் புகாரில் கைதான ஞானசேகர் மீது 7 திருட்டு வழக்கு
பாலியல் புகாரில் கைதான ஞானசேகர் மீது 7 திருட்டு வழக்கு
UPDATED : பிப் 23, 2025 02:18 AM
ADDED : பிப் 22, 2025 11:35 PM
சென்னை:அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது, ஏழு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், ஞானசேகரனுக்கு பின்னணியில் முக்கிய நபர்கள் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அக்குழுவினர், இந்த வழக்கு குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், 2022 முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள தனி வீடுகளில், பல நாட்கள் நோட்டமிட்டு, நகை, பணத்தை கொள்ளை அடித்ததாக, சிறப்பு புலனாய்வு குழுவிடம், ஞானசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து, பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், ஏழு திருட்டு சம்பவங்களில், ஞானசேகரனுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த திருட்டு வழக்கில் ஞானசேகரனை கைது செய்த பள்ளிக்கரணை போலீசார், ஆலந்துார் நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை விற்று, சொகுசு கார் வாங்கியதாகவும், பிரியாணி கடை வைத்ததாகவும் ஞானசேகரன் தெரிவித்து உள்ளார்.