UPDATED : மார் 22, 2024 12:39 PM
ADDED : மார் 22, 2024 12:39 AM
சென்னை:''வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களில், ஜன., 1 அன்று அல்லது அதற்கு முன், 18 வயது நிறைவடைந்தவர்கள் பெயர் மட்டுமே சேர்க்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
தலைமை செயலகத்தில், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில், 21,229 துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதில், 15,113 துப்பாக்கிகள், தேர்தலையொட்டி போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
வங்கி உட்பட 2,096 துப்பாக்கிகளை ஒப்படைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி உரிமம், 88 ரத்து செய்யப்பட்டுள்ளது. பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட, 962 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம், நாளை பகல் 12:00 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் நடக்க உள்ளது. பொது கட்டடங்களில் இருந்த சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், 2.88 லட்சம்; தனியார் கட்டடங்களில், 92,962 விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வந்த, 208 புகார்களில், 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜன., 22ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, பெயர் சேர்க்கும் பணி நடந்து வருகிறது.
இவர்களில், கடந்த ஜன.,1 மற்றும் அதற்கு முன்பு 18 வயதை எட்டியவர்களின் பெயர் மட்டுமே, வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். ஏப்., 1 அன்று 18 வயதை எட்டுபவர்களின் பெயர் இடம் பெறாது.
'சி விஜில்' மொபைல் போன் செயலி வழியே, 726 புகார்கள் வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், புதிய அரசாணைகள் வெளியிடக்கூடாது. புதிய திட்டங்களை அறிவிக்கவோ, செயல்படுத்தவோ கூடாது. வழக்கமான அரசு பணிகள் நடப்பதில் எந்த தடையும் கிடையாது.
இவ்வாறு சத்யபிரதா சாஹு கூறினார்.

