ADDED : மே 07, 2024 09:43 PM
சென்னை:'இனி வரும் காலங்களில், சாலைகளின் ஓரம் அமைக்கப்படும் மின் கம்பங்களை, வேகத்தடைகளுக்கு அருகில் அமைக்காமல், சற்று தள்ளி பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும்' என, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மின் பகிர்மான இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
சாலை ஓரம் அமைக்கப்படும் மின் கம்பங்களை, வேகத்தடைகளுக்கு அருகில் அமைக்காமல், சற்று தள்ளி அமைக்கலாம். பழுதடைந்த கம்பங்களை உடனே அகற்றி, புதிய கம்பத்தை பாதுகாப்பாக அமைக்க வேண்டும்.
அகற்றப்பட்டப்பட்ட கம்பங்களையும் உடனே அப்புறப்படுத்த வேண்டும். வேகத்தடை இருக்கும் இடத்திற்கு அருகில் மின் கம்பங்கள் இருந்தால், அவற்றை உடனே பாதுகாப்பான துாரத்திற்கு தள்ளி போடும் வாய்ப்புள்ளதா என ஆராய்ந்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். சாலைக்கு நடுவிலும், சாலைகளை விரிவுபடுத்தும் போதும், கம்பங்கள் நடுவில் வரும் பட்சத்தில், நடப்பட்டுள்ள கம்பங்களை உடனே அகற்ற வேண்டும். பின், பாதுகாப்பை உறுதி செய்து, கம்பத்தை பாதுகாப்பான இடத்தில் அமைக்க வேண்டும். இதை பிரிவு அலுவலக பணியாளரிடம் தெரிவித்து, பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

