ஜாதி, மத ரீதியாக தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும்: ஐகோர்ட்
ஜாதி, மத ரீதியாக தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும்: ஐகோர்ட்
ADDED : பிப் 27, 2025 12:15 AM
சென்னை:'ஜனநாயகத்தில் இந்தியா அடியெடுத்து வைத்து, 75 ஆண்டுகளானாலும், இன்னும் குழந்தைப் பருவத்தில் தான் நாடு உள்ளது. ஜாதி, மதம் அடிப்படையில், தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும்' என, சென்னை உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சேர்ந்த ராஜேஷ் அனுார் மகிமைதாஸ் தாக்கல் செய்த மனு:
தேர்தல் மற்றும் தேர்தல் அல்லாத காலங்களில், பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் லாபத்துக்காக, ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்காளர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துகின்றனர்.
ஜாதி, மதம், மொழி ரீதியாக ஓட்டுகளை சேகரிப்பது என்பது ஊழல் நடவடிக்கை என, கடந்த 2017ம் ஆண்டு வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை அமல்படுத்துவதை கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய சுதந்திரமான ஆணையத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'தேர்தல் பிரசாரம், ஜாதி, மத அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை உறுதி செய்ய, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன' என, தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்தியா போன்ற பெரிய நாட்டில், ஒரே இரவில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியாது.
ஜனநாயகத்தில் இந்தியா அடியெடுத்து வைத்து, 75 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் குழந்தைப் பருவத்தில் தான் நாடு உள்ளது. இந்த மாற்றங்கள் ஏற்பட இன்னும் சில காலம் ஆகும்.
மக்களும், அரசியல்வாதிகளும், ஜாதி, மத அடிப்படையில் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என, நம்புகிறோம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

