'கலர் கலராக பொய் சொல்கின்றனர்': தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி
'கலர் கலராக பொய் சொல்கின்றனர்': தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி
ADDED : ஏப் 02, 2024 05:34 AM

சென்னை: தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அறிவாலயத்தில் அளித்த பேட்டி:
ஒரு பொய்யை பலமுறை சொன்னால், அது உண்மையாகி விடும் என, பிரதமர் மோடி நம்புகிறார்; அது எடுபடாது. தமிழகம் கேட்கிற நிதியை கொடுக்க மனம் இல்லாத பிரதமர் மோடி, மக்களை திசை திருப்ப கச்சத்தீவு விஷயத்தில் நாடகம் நடத்தி வருகிறார்.
ஏதோ நாங்கள் நேற்று கச்சத்தீவை கொடுத்தது போல, இன்றைக்கு அது குறித்து பேசி வருகிறார். இது, 1974ல் நடந்தது. அன்றைக்கு இதற்கு எதிராக கருணாநிதி, சட்டசபையில் தனி தீர்மானத்தை நிறைவேற்றினார்.
அத்துடன் நிறுத்திவிடாமல், தமிழகம் முழுதும் கண்டன கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த வரலாறு எல்லாம் இவர்களுக்கு தெரியவில்லை. 50 ஆண்டுகள் ஆகிவிட்டன; என்ன பொய் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவர் என்று நினைக்கின்றனர். தோல்வி பயம் காரணமாக, கலர் கலராக பொய்களை சொல்ல ஆரம்பித்து இருக்கின்றனர்.
மத்திய அரசு நிதியில் இருந்து, 34,000 கோடி ரூபாயை இலங்கைக்கு கொடுத்தார் மோடி.அப்போது, அவர் கேட்டு வாங்கி இருக்கலாமே கச்சத்தீவை. இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அமித் ஷாவின் மகன் இடம் பெற வேண்டும் என முயற்சி எடுத்த பிரதமர் மோடி, மீனவர்கள் நலன் காப்பதற்காக, கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டியது தானே.
இவ்வாறு கூறினார்.

