பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி பா.ஜ., மீது திருமா புகார்
பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி பா.ஜ., மீது திருமா புகார்
ADDED : ஜூலை 12, 2024 10:00 PM
சென்னை:''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, பதற்றத்தை ஏற்படுத்த, சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் திட்டமிட்டு செயல்படுகின்றன. குறிப்பாக, பா.ஜ.,வுக்கு இந்தச் செயல் திட்டம் இருப்பதை அறிய முடிகிறது,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பின், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, பதற்றத்தை ஏற்படுத்த, சில அரசியல் கட்சிகள், சில அமைப்புகள் திட்டமிட்டு செயல்படுகின்றன. குறிப்பாக, பா.ஜ.,வுக்கு இந்த செயல் திட்டம் இருப்பதை அறிய முடிகிறது. எனவே, ஆம்ஸ்ட்ராங் படுகொலையிலும், ஒரு அரசியல் செயல் திட்டம் இருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கிறோம்.
இதுபோன்ற விவகாரங்கள் விசாரணைக்கு உரியவையாக உள்ளன. அவர்களின் அரசியல் செயல் திட்டம் என்பது, தி.மு.க., அரசுக்கு எதிராக, இங்கு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்பதாகவே உள்ளது. அதற்கு துணையாக, பல அமைப்புகளும் செயல்பட்டு வருவதை காண முடிகிறது.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கூடிய சமூக விரோதிகளை, அவர்களுக்கு அடைக்கலம் தரக்கூடியவர்களை கண்காணித்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

