ADDED : செப் 14, 2024 02:32 AM
சென்னை:தமிழகத்தில் முதல் முறையாக சூரியசக்தி மின் உற்பத்தி நேற்று முன்தினம் 6090 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.
சூரியசக்தி மின் உற்பத்திக்கு சூரியனின் வெப்பத்தை விட வெளிச்சமே அவசியம். தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேலாக சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சூழல் நிலவுகிறது.
குறிப்பாக விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 5:30 முதல் இரவு 7:00 மணி வரையும்; மற்ற மாவட்டங்களில் காலை, 6:30 முதல் மாலை 6:00 மணி வரையும் சூரிய வெளிச்சம் கிடைக்கிறது.
இதனால் பெரிய நிறுவனங்கள் தென் மாவட்டங்களில் அதிக திறனில், நிலத்தில் சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க ஆர்வம் காட்டுகின்றன.
மாநில மின் பகிர்ந்தளிப்பு மைய தகவலின்படி தற்போது தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த சூரியசக்தி மின் நிலையங்களின் உற்பத்தி திறன் 8784 மெகாவாட்.
மழை பெய்யும் நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் சூரியசக்தி மின் நிலையங்களில் தினமும் சராசரியாக 4000 - 4500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.
செப்.7ம் தேதி அதிக அளவாக 5985 மெகா வாட் கிடைத்தது.
நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத அளவாக 6090 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.