தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பிரயோகிக்க கூடாது: ஐகோர்ட்

குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பிரயோகிக்க கூடாது: ஐகோர்ட்

குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பிரயோகிக்க கூடாது: ஐகோர்ட்


ADDED : ஆக 18, 2024 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2024 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'குண்டர் தடுப்புச் சட்டத்தை சர்வ சாதாரணமாக பிரயோகிக்க அனுமதிக்க முடியுமா? தனிப்பட்ட குற்றங்களுக்கு எப்படி இந்தச் சட்டத்தை பிரயோகிக்க முடியும்?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிஉள்ளது.

நிதி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜ் என்பவருக்கு எதிராக, குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் செல்வராஜ் மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், ''மனுதாரரின் உதவியுடன் போலி கணக்குகள் துவங்கப்பட்டு, போலி சம்பள சான்றிதழும் வழங்கி, அதன் அடிப்படையில் 3 கோடி ரூபாய் வரை வங்கிகளில் கடன் பெறப்பட்டுள்ளது.

''மேற்கொண்டு மோசடி நடப்பதை தடுக்க, செல்வராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்க வேண்டியது அவசியம்,'' என்றார்.

அப்போது நீதிபதிகள், 'தனி நபர் தொடர்பான குற்றங்களில், போலீசார் விசாரணை நடத்தி, பணத்தை வசூலிக்கலாம். இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் தன்மையை பார்க்கும்போது, பொது அமைதி எதுவும் மீறப்படவில்லை.

வங்கி பரிவர்த்தனை தொடர்பான தனிப்பட்ட குற்றங்களை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது. அதனால், மனுதாரரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைத்ததை ரத்து செய்கிறோம்' என, கூறினர்.

மேலும், 'சட்டத்தின் கீழ் யாரை குண்டர் என வரையறுக்கலாம் என்பதை, அரசு பரிசீலிக்க வேண்டும்; சர்வ சாதாரணமாக இந்தச் சட்டத்தை பிரயோகிக்க அனுமதிக்க முடியுமா; தனிப்பட்ட குற்றங்களுக்கு எப்படி குண்டர் சட்டத்தை பிரயோகிக்க முடியும்' எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஒருவரை, சட்டவிரோத காவலில் ஒரு நாள் வைத்திருந்தால் கூட, அது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாகவும், நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us