ADDED : மே 10, 2024 05:35 AM

சென்னை : தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அக் ஷய திருதியை கொண்டாடப்படுகிறது. இதனால், விரும்பிய நகைகளை வாங்க பலரும் நகை கடைகளுக்கு படையெடுப்பர். அவர்களின் பாதுகாப்பிற்காக, நகை கடைகள் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தங்க நகைகள் பயன்பாடு மற்றும் விற்பனை அதிகம் உள்ளது. அக் ஷய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு அக் ஷய திருதியை கொண்டாடப்படுகிறது.
அக் ஷய திருதியை முன்னிட்டு, 'தங்கம் வாங்கினால் 1 கிராமுக்கு அதிக தள்ளுபடி, தங்க நாணயம் இலவசம்' என, பல்வேறு சலுகைகளை நகை கடைகள் அறிவித்துள்ளன.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் கடந்த மாதத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை, 55,000 ரூபாயை தாண்டியது. பின்னர், தங்கம் விலை சற்று குறைந்தது. நேற்று கிராம் தங்கம், 6,615 ரூபாய்க்கும்; சவரன், 52,920 ரூபாய்க்கும் விற்பனையானது.
அக் ஷய திருதியைக்கு தங்க வாங்க, பலரும் நகை கடைகளில் உள்ள மாதாந்திர சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து, மாதம், 1,000 ரூபாய், 2,000 ரூபாய் செலுத்தி வந்தனர். அவர்கள், தங்களின் சேமிப்பு பணத்தில் விரும்பிய நகைகளை தேர்வு செய்து, முன்பதிவு செய்து வந்தனர். நேற்றும் பலர் முன்பதிவு செய்தனர். இதனால், நகை கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது. முன்பதிவு செய்த பலரும், அக் ஷய திருதியை முன்னிட்டு இன்று முதல் நகைகளை வாங்க, நகை கடைகளுக்கு படையெடுப்பர். இதனால், கடைகளில் கூட்டம் அலைமோதும்.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
வாடிக்கையாளர்கள் எவ்வித சிரமமும் இன்றி நகை கடைகளுக்கு வந்து செல்ல, உரிய பாதுகாப்பு உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
வெயில் வெப்பத்தில் இருந்து தணிக்க, வாடிக்கையாளர்களுக்கு குடிநீர், மோர், பழரசம், குளிர்பானம் வழங்கப்படுகின்றன; சிற்றுண்டிகளும் வழங்கப்படுகின்றன. இரவில் நகை வாங்குவோர், பாதுகாப்புடன் வீடுகளுக்கு செல்ல, நகை கடைகளின் சார்பில் வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
அக் ஷய திருதியைக்காக, பல்வேறு புதிய வடிவங்களில் நகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பலரும் எடை குறைவான நகைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த அக் ஷய திருதியைக்கு தங்கம் விற்பனை, கடந்த ஆண்டை விட 25 - 30 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.