ADDED : ஜூன் 26, 2024 03:44 AM
சென்னை : “அரசு நிலங்களில் மரங்களை வெட்டுதற்கு விரிவான விதிமுறைகளை வகுத்து, சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்க, தமிழக மரங்கள் பாதுகாப்பு சட்டம் - 2024 இயற்றப்படும்,” என, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் அவரது அறிவிப்புகள்:
l ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தீவில் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலா, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்
l கோவையில் உள்ள வன உயர் பயிற்சியக மரபியல் பிரிவில், விதை நிலைதன்மையை பாதுகாக்கவும், ஆண்டு முழுதும் நடவு செய்வதற்கு விதைகளை வழங்கவும், 'கிரயோஜெனிக்' குளிர்சாதன வசதியுடன் கூடிய சேமிப்பு பெட்டகம், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்
l அரசுக்கு சொந்தமான நிலங்களில் மரங்களை வெட்டுதற்கான விரிவான விதிமுறைகளை வகுத்து, சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்க, தமிழக மரங்கள் பாதுகாப்பு சட்டம் --- 2024 இயற்றப்படும்
l வனங்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், காடுகளை மீட்டெடுப்பதில் புதிய பரிமாணங்கள் அடைவதற்கும், புதிய மாநில வனக்கொள்கை வெளியிடப்படும்
l சமீபத்தில் மறைந்த நாட்டின் தலைசிறந்த வன பாதுகாப்பு ஆர்வலர் ஏ.ஜே.டி.ஜான்சிங் பெயரில், 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வன உயிரின பாதுகாப்பு விருது வழங்கப்படும்
l நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வான் பூங்கா அமைக்கப்படும்
l கூடலுார் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில், 'ஆர்க்கிட்டேரியம்' எனும் மரங்களில் தொற்றி வளரும் அழகான பூக்கும் தாவரங்கள், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்
l தமிழக அரசால் கண்டறியப்பட்டுள்ள 40 மலையேற்ற வழித்தடங்களின் வரைப்படங்கள் உருவாக்கப்படுவதுடன், தேவையான அடிப்படை வசதிகளும், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.

