உதவி பேராசிரியர்களுக்கான சம்பள விவகாரத்தில் அற்பமாக மேல்முறையீடு செய்து விளையாடுவதா?
உதவி பேராசிரியர்களுக்கான சம்பள விவகாரத்தில் அற்பமாக மேல்முறையீடு செய்து விளையாடுவதா?
ADDED : ஆக 24, 2024 02:57 AM

மதுரை: திருநெல்வேலி சாரா டக்கர் கல்லுாரியில் உதவி பேராசிரியர்களுக்கு சம்பள நிலுவை வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த 10 மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 'தமிழக அரசு தனது குடிமக்கள் மீதான படுமோசமான விளையாட்டின் விளைவாக எழும் அற்பமான முறையீடுகள் இவை. ஒவ்வொரு முறையீட்டு மனுவிற்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டது.
திருநெல்வேலி சாரா டக்கர் கல்லுாரியில் புஷ்பலதா கிரேஸ்லின் உட்பட சிலர் உதவி பேராசிரியர்களாக அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனுமதியுடன் 2009 ல் நியமிக்கப்பட்டனர். திருநெல்வேலி மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் 2009 ஜூன் 17 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 2020 மார்ச் 11 ல் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தார். மறுநாளே சில காரணங்களுக்காக ஒப்புதல்கள் திரும்பப் பெறப்பட்டன. இதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 2020 ல் உதவி பேராசிரியர்கள் வழக்குகள் தாக்கல் செய்தனர்.
வழக்குகள் நிலுவையில் இருந்தபோது ஒப்புதலை திரும்பப்பெறும் உத்தரவை ரத்து செய்து, சென்னை கல்லுாரிக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். இதை பதிவு செய்த உயர்நீதிமன்றம்,'சம்பளம் வழங்குவதற்கான பரிந்துரையை அரசுக்கு கல்லுாரி சமர்ப்பிக்க வேண்டும். நான்கு வாரங்களில் சம்பளம் வழங்க வேண்டும்,' என 2021 ல் உத்தரவிட்டு பைசல் செய்தது. மனுதாரர்களுக்கு 2022 ஜூலை முதல் சம்பளம் வழங்கப்பட்டது.
உதவி பேராசிரியர்கள்,'2009 ஜூன் 17 முதல் 2022 ஜூன் வரை சம்பளம், சலுகைகள் வழங்க உத்தரவிட வேண்டும்,'என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். தனி நீதிபதியின் விசாரணையின்போது அரசு தரப்பு வழக்கறிஞர், 'அரசிடமிருந்து சிறப்பு மானியம் பெறப்பட்டதும் சம்பள நிலுவை வழங்கப்படும்,' என தெரிவித்தார்.
தனி நீதிபதி,'மனுதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள். அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கான சம்பளத்தை வழங்க வேண்டும்,' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக உயர்கல்வித்துறை செயலர், கல்லுாரிக் கல்வி இயக்குனர், திருநெல்வேலி கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு:
இந்த 10 மேல்முறையீட்டு மனுக்களும், தமிழக அரசு தனது குடிமக்கள் மீதான படுமோசமான விளையாட்டின் விளைவாக எழும் அற்பமான முறையீடுகள். இது போன்ற ஒரு முடிவு அரசால் எடுக்கப்படுவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 2009 ல் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் நியமனம் 2020 ல் அங்கீகரிக்கப்பட்டது. பின் ஒப்புதலை ரத்து செய்து, சம்பளத்தை மறுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் அனுமதி ரத்து உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அதன் பிறகும் உதவி பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை.
தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு முறையீட்டு மனுவிற்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அத்தொகையில் ஒவ்வொரு வழக்கிலும் தலா ரூ.25 ஆயிரத்தை உதவி பேராசிரியர்களுக்கும், மீதம் ரூ.25 ஆயிரத்தை சென்னை அடையாறு கேன்கேர் அறக்கட்டளைக்கும் வழங்க வேண்டும். தொகையை மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு பொறுப்பான அதிகாரிகளிடமிருந்து தமிழக அரசு வசூலிக்கலாம்.
எதிர்காலத்திலாவது இதுபோன்ற மேல்முறையீடுகளை அரசு தாக்கல் செய்வதைத் தவிர்க்கும் வகையில் இந்த உத்தரவானது குறைந்தபட்சம் தடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என நம்புகிறோம். இவ்வாறு உத்தரவிட்டனர்.