உதவி பேராசிரியர்களுக்கான சம்பள விவகாரத்தில் அற்பமாக மேல்முறையீடு செய்து விளையாடுவதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அபராதம்
உதவி பேராசிரியர்களுக்கான சம்பள விவகாரத்தில் அற்பமாக மேல்முறையீடு செய்து விளையாடுவதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அபராதம்
ADDED : ஆக 24, 2024 02:13 AM
மதுரை:திருநெல்வேலி சாரா டக்கர் கல்லுாரியில், புஷ்பலதா கிரேஸ்லின் உட்பட சிலர், உதவி பேராசிரியர்களாக அரசின் அனுமதியுடன் 2009ல் நியமிக்கப்பட்டனர். திருநெல்வேலி மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர், 2020ல் இந்த நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தார். ஆனால், மறுநாளே ஒப்புதல்கள் திரும்பப் பெறப்பட்டன.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில், 2020ல், உதவிப் பேராசிரியர்கள் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கு நிலுவையில் இருந்தபோது ஒப்புதலை திரும்பப் பெறும் உத்தரவை ரத்து செய்து, சென்னை கல்லுாரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார்.
இதை பதிவு செய்த உயர் நீதிமன்றம், 'சம்பளம் வழங்குவதற்கான பரிந்துரையை அரசிடம் கல்லுாரி சமர்ப்பிக்க வேண்டும். நான்கு வாரங்களில் சம்பளம்வழங்க வேண்டும்' என, 2021ல் உத்தரவிட்டு பைசல் செய்தது.
மனுதாரர்களுக்கு, 2022 ஜூலை முதல் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், உதவிப் பேராசிரியர்கள், '2009 ஜூன் 17 முதல், 2022 ஜூன் வரை சம்பளம், சலுகைகள் வழங்க உத்தரவிட வேண்டும்' என உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
அதை எதிர்த்து, தமிழகஉயர்கல்வித் துறை செயலர், கல்லுாரிக் கல்வி இயக்குனர், திருநெல்வேலி கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு:
இந்த, 10 மேல்முறையீட்டு மனுக்களும், தமிழகஅரசு தன் குடிமக்கள் மீதான படுமோசமான விளையாட்டின் விளைவாக எழும் அற்பமான முறையீடுகள். இதுபோன்ற ஒரு முடிவு அரசால் எடுக்கப்படுவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 2009ல் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் நியமனம், 2020ல் அங்கீகரிக்கப்பட்டது.
பின், ஒப்புதலை ரத்து செய்து சம்பளத்தை மறுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நீதிமன்ற தலையீட்டின்படி, அனுமதி ரத்து உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
அதன்பிறகும் உதவிப்பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு முறையீட்டு மனுவிற்கும் தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
அத்தொகையில் ஒவ்வொரு வழக்கிலும் தலா 25,000 ரூபாயை உதவிப் பேராசிரியர்களுக்கும், மீதம், சென்னை அடையாறு கேன்கேர் அறக்கட்டளைக்கும் வழங்க வேண்டும்.
தொகையை மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு பொறுப்பான அதிகாரிகளிடமிருந்து தமிழக அரசு வசூலிக்கலாம்.
எதிர்காலத்திலாவது இதுபோன்ற மேல்முறையீடுகளை அரசு தாக்கல் செய்வதைத் தவிர்க்கும் வகையில், இந்த உத்தரவானது குறைந்தபட்சம் தடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

