UPDATED : ஆக 24, 2024 03:14 PM
ADDED : ஆக 24, 2024 01:47 AM
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்த அறிக்கை: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட போவதை அறிந்ததும், 16, 18 ஆகிய நாட்களில் எலி மருந்து தின்றதாக, நேற்று மாலை முதல் செய்திகள் வெளியாகின. இன்று காலை, அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
எலி மருந்து சாப்பிட்டதாக கூறப்படுபவர், நேற்று மாலை வரை ஐந்து நாட்களாக எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தார் என்பது மர்மமாக உள்ளது. கால் உடைந்த நிலையில், 19ம் தேதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவருக்கு ஐந்து நாட்களாக உடலில் வேறு பாதிப்புகள் ஏற்பட்டுஇருப்பது தெரியவில்லையா?
கடந்த ஜூலை மாதம், சிவராமன் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சி செய்திருப்பதாக தெரிய வருகிறது. தற்போது அதை பயன்படுத்தி, இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கிய புள்ளிகளை காப்பாற்ற, சிவராமன் எலி மருந்து தின்றதால், மரணம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறதோ என்ற கேள்வி வலுப்படுகிறது.
இதுதொடர்பாக அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு புலனாய்வு குழு, முழு விசாரணை நடத்தி, இந்த குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

