ADDED : ஏப் 23, 2024 09:11 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 14 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சிறப்புப் பூஜைகள், சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா நடந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலையில் கோலாகலமாக துவங்கியது.
முன்னதாக காலை ஸ்ரீபாகம்பிரியாள் ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் மற்றும் விநாயகர், முருகப் பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. அதன்பின்பு சிறிய தேரில் விநாயகரும் முருகப்பெருமானும், பெரிய தேரில் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடன் ஸ்ரீசங்கர ராமேஸ்வரரும் எழுந்தருளினர்.
தொடர்ந்து காலை 10.45 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. கீழ ரத வீதியில் இருந்து தொடங்கிய தேரோட்டத்தை வடக்கு மாவட்ட தி.மு.க., செயலரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி ஆகியோர் வடம்பிடித்து தொடங்கி வைத்தனர்.
தேருக்கு முன் யானை, குதிரை அணிவகுப்புகள், களியல் ஆட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை, ராஜமேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், உறுமிமேளம், தப்பாட்டம், சிவகைலாய சிவபூதகண வாத்தியங்களுடன், மகளிர் கோலாட்டம் மற்றும் தேவார இன்னிசையுடன் வேதபாராயணம் பாட, சிலம்பாட்டம் வாண வேடிக்கையுடன் மாணவ, மாணவியரின் வீர விளையாட்டுகளுடன் தேரோட்டம் நடைபெற்றது.
தேர் தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் நிலைக்கு வந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

