வள்ளலார் சர்வதேச மையம்: என்னென்ன வசதிகள்?: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
வள்ளலார் சர்வதேச மையம்: என்னென்ன வசதிகள்?: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : ஏப் 03, 2024 12:08 PM

சென்னை: வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதி செய்யப்பட உள்ளன? என்பது குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வள்ளலார் சர்வதேச மையத்தை வடிவமைக்க, சர்வதேச அளவில் கோரப்பட்ட ஒப்பந்தத்தில் பங்கேற்ற, ஏழு நிறுவனங்களில் தகுதியான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதன்பின், கடலுார் மாவட்ட கலெக்டர் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, 100 கோடி ரூபாயில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வடலூர் சத்திய ஞானசபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை கோரி பா.ஜ., நிர்வாகி வினோத் ராகவேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 03) விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில், ‛‛ சர்வதேச மையம் அமைத்தாலும் அந்த நிலம் ராமலிங்க அடிகளார் அறக்கட்டளை வசம் தாம் இருக்கும். அடிப்படை வசதிகள் இல்லை என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வந்ததால் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதி செய்யப்பட உள்ளன? என்பது குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

