விதவை உதவித்தொகைக்கு பரிந்துரைக்க ரூ.5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது; மத்திய அரசின் புதிய சட்டத்தில் தமிழகத்தில் முதல் வழக்கு
விதவை உதவித்தொகைக்கு பரிந்துரைக்க ரூ.5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது; மத்திய அரசின் புதிய சட்டத்தில் தமிழகத்தில் முதல் வழக்கு
ADDED : ஜூலை 02, 2024 05:27 AM

ராமநாதபுரம் : விதவை உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பம் செய்தவரிடம் ரூ.5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மத்திய அரசின் புதிய பாரதிய நியாய சன்ஹிதா என்ற சட்டத்தின் 173 வது பிரிவின் கீழ் தமிழகத்தில் முதல் வழக்காக பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே மேலக்கன்னிசேரி பகுதியில் உள்ள சிறுமணியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை 62. இவரது விதவை மகளுக்கு மாதாந்திர பென்ஷன் தொகை பெற விண்ணப்பித்தார்.
இந்த விண்ணப்பம் குறித்து நல்லுார் குரூப் வி.ஏ.ஓ., பூமிசந்திரனிடம் கேட்டுள்ளார். இதற்கு பூமிசந்திரன் உயர் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதால் ரூ.6000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
பாண்டித்துரை அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என மறுத்துள்ளார்.
இதையடுத்து 5000 ரூபாயாவது கொடுத்தால் தான் காரியம் ஆகும் என கண்டிப்புடன் வி.ஏ.ஓ., தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாண்டித்துரை ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா என்ற மத்திய அரசின் புதிய சட்டத்தின் 173 வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ரசாயனம் தடவிய 5000 ரூபாயை பாண்டித்துரையிடம் கொடுத்து முதுகுளத்துார் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த வி.ஏ.ஓ., பூமிசந்திரனிடம் கொடுக்க வைத்தனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பூமிசந்திரனை கையும் களவுமாக கைது செய்தனர்.
டி.எஸ்.பி., ராமச்சந்திரன் கூறியதாவது:
மத்திய அரசின் புதிய சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவின் 173 வது பிரிவின் கீழ் லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். இதில் கொடுப்பவர் விருப்பப்பட்டு கொடுத்தால் தவறாகும். அவர் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாமல் தான் புகார் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் புதிய சட்டத்தில் முதன் முதலாக தமிழகத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளோம் என்றார்.