குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : ஏப் 02, 2024 02:06 AM
பூனாம்பாளையம்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூனாம்பாளையம் ஊராட்சியில், வடக்கிப்பட்டி கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கொள்ளிடம் பிரிவு வாய்க்காலில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து, இந்த கிராமத்துக்கு குழாய் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்தனர். தற்போது, 52 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகிக்காததால், போர் தண்ணீரை குடித்து வருகின்றனர்.
இதனால், நேற்று காலை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, துறையூர் பட்டறை முடக்கு பகுதியில், 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காலிக் குடங்களுடன் அவர்கள், அவ்வழியாக வந்த பஸ்களையும் சிறைப்பிடித்தனர். மண்ணச்சநல்லுார் ஒன்றிய அதிகாரிகள், மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை சமாதானப்படுத்தியதால், மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், மண்ணச்சநல்லுார் - துறையூர் நெடுஞ்சாலையில், 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

