ADDED : மே 29, 2024 04:29 AM

லோக்சபா தேர்தல் நிறைவு கட்டமான 7 ம் கட்டத்தில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஜூன் 1 ல் தேர்தல் நடக்க உள்ளது. வாரணாசி தொகுதி தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர் ராஜலிங்கம் தமிழகத்தின் கடையநல்லுாரை சேர்ந்தவர்.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
ஓட்டுப்பதிவிற்கான அடிப்படை பணிகள், ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் எல்லாம் தயாராக உள்ளன. இந்த தேர்தலில் வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு வரவழைப்பது எங்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
அதற்கு காரணம் இங்கு நிலவும் கடும் வெப்பம்; அனல் காற்று வீசுகிறது. இதனை கருத்தில் கொண்டு ஓட்டுச்சாவடிகளில் நிழற்பந்தல்கள் அமைத்துள்ளோம். குடிநீர் வசதி ஏற்படுத்தியுள்ளோம்.
சில மாதிரி ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதியுடன் கூடுதலாக குழந்தைகளை காக்க வைக்கும் வசதி, வாக்காளர்கள் ஓய்வெடுக்கும் வசதியையும் ஏற்படுத்தி இருக்கிறோம்.
முதல் நாளிலேயே அலுவலர்கள், ஓட்டுப்பதிவிற்கான பொருட்களுடன் ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று விடுவார்கள்.
இந்த முறை வெப்பம் அதிகம் என்பதால், அதனை எதிர்கொள்வதற்கான 'மெடிக்கல் கிட்' ஒன்றும் அலுவலர்களுக்கு வழங்குகிறோம். அதில் முதலுதவி மருந்து பொருட்கள் இருக்கும். அலுவலர்களுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடி மருத்துவம் செய்ய, நடமாடும் மருத்துவக்குழுக்களும் ஆங்காங்கே தயாராக இருக்கும்.
பதட்டமான ஓட்டுச்சாவடிகள்
பதட்டமான ஓட்டுச்சாவடிகளை ஆறு மாதத்திற்கு முன்பே கண்டறிந்து அவற்றை பல பிரிவுகளாக பிரித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
சட்டம் ஒழுங்குக்கு இடையூறு ஏற்படும் என கருதப்படும் இடங்களிலும், அரசியல் ரீதியான பதட்டம் ஏற்படும் என நினைக்கும் இடங்களையும் கண்டறிந்து ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.
தேர்தல் பார்வையாளர்களோடு, மத்திய அரசுப்பணியாளர்களான 'மைக்ரோ' அப்சர்வர்களும் செயல்படுவார்கள்.
இவை எல்லாம் 'வெப் காஸ்டிங்' மூலம் கண்காணிக்கப்படும். ஓட்டுச்சாவடி பகுதிகளில் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள், குற்றப்பின்னணி உடையவர்கள் பட்டியல் எல்லாம் முன்பே தயாரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியின் கிராமங்களை சேர்ந்த 25 சதவீதம் வாக்காளர்கள் பல ஆண்டுகளாக டில்லி, மும்பை போன்ற இடங்களில் வேலைக்காக சென்று அங்கு வாழ்பவர்கள்.
அவர்களின் குடும்பத்தினர் இங்கு இருப்பதால் வருவார்கள்.
இவர்களை ஓட்டுப்பதிவுக்கு வாருங்கள் என்று 'கால் சென்டர்கள்' மூலம் அழைத்துள்ளோம்.
வாரணாசி தொகுதியில் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி இருப்பவர்களும் அதிகம்.
எனவே எல்லோரையும் வரவழைத்து, அதுவும் அதிக வெப்பம் நிலவும் நேரத்தில் ஓட்டுப்பதிவை அதிகரிப்பது சவாலான விஷயம்.
என்றாலும் அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஓட்டுப்பதிவு நேர்மையாகும், சுதந்திரமாகவும் நடக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவித்தார்.
- நமது நிருபர் -