வடசென்னை - 3 நிலையத்தில் வணிக மின் உற்பத்தி எப்போது?
வடசென்னை - 3 நிலையத்தில் வணிக மின் உற்பத்தி எப்போது?
ADDED : ஆக 24, 2024 08:56 PM
சென்னை:திருவள்ளூரில் உள்ள வடசென்னை - 3 அனல் மின் நிலையத்தில், சோதனை உற்பத்தி துவங்கி ஐந்து மாதங்களாகியும், வணிக மின் உற்பத்தி துவங்கப்படவில்லை.
அந்த பணியை விரைவாக துவக்குமாறு, பி.எச்.இ.எல்., நிறுவனத்தை மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், 800 மெகாவாட் திறனில் வடசென்னை - 3 அனல் மின் நிலையம் அமைத்துள்ளது. கடந்த, 2016ல் துவங்கிய கட்டுமான பணியின் திட்டச்செலவு, 10,158 கோடி ரூபாய்.
நிலக்கரி
மின் நிலையத்தில், 'பாய்லர், டர்பைன், ஜெனரேட்டர்' நிறுவுதல் உள்ளிட்ட முக்கிய பணிகளை, பி.எச்.இ.எல்., நிறுவனமும்; நிலக்கரி, சாம்பல் கட்டமைப்பு பணிகளை, தனியார் நிறுவனமும் மேற்கொண்டன. 2020 - 21ல் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், நீண்ட இழுபறிக்கு பின் இந்தாண்டு மார்ச் 7ல் தான் சோதனை மின் உற்பத்தி துவங்கியது.
தினமும் சராசரியாக, 250 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், ஜூன் 27ல் முழு திறனான 800 மெகா வாட் உற்பத்தி செய்யப்பட்டது. பின், அது குறைக்கப்பட்டு தினமும், 500 - 600 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒரு மின் நிலையத்தில் சோதனை உற்பத்தி துவக்கிய பின் தொடர்ந்து, 72 மணி நேரம் முழுதிறனில் உற்பத்தி செய்ய வேண்டும். அதை தொடர்ந்து தான், மின் நிலையம் வணிக ரீதியாக செயல்பட துவங்கியதாக அறிவிக்கப்படும்.
வலியுறுத்தல்
ஆனால், வட சென்னை - 3 மின் நிலையத்தில் சோதனை உற்பத்தி துவங்கி ஐந்து மாதங்களாகியும் வணிக உற்பத்தி துவங்கப்படவில்லை.
இந்நிலையில், வணிக மின் உற்பத்தியை விரைவாக துவக்கி, மின் நிலைய செயல்பாட்டை ஒப்படைக்குமாறு, பி.எச்.இ.எல்., நிறுவன அதிகாரிகளை, மின் வாரிய அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.