நிலத்தடி நீராதாரம் கண்டறிய வரைபடம் குடிநீர் வாரிய புது தொழில்நுட்பம் அறிமுகம்
நிலத்தடி நீராதாரம் கண்டறிய வரைபடம் குடிநீர் வாரிய புது தொழில்நுட்பம் அறிமுகம்
ADDED : செப் 17, 2024 10:17 PM
சென்னை:நிலத்தடி நீரை கண்டறிவதற்கு தேங்காய், எலுமிச்சையை கையில் வைத்து உருட்டுதல், குச்சியை சுற்றுதல் உள்ளிட்ட பாரம்பரிய முறைகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் வாயிலாக, பூமியின் மேல்மட்டத்தில் உள்ள நீரூற்றுகளை எளிதாக அடையாளம் காண முடியும்.
ஆனால், ஆழமான இடத்தில் உள்ள நீரை எளிதாக கண்டுபிடிக்க முடியாது.
இதற்கு நவீன தொழிற்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். இப்பணிகளை, தமிழக குடிநீர் வடிகால் வாரியம் எளிமையாக்கியுள்ளது. இதற்கென, நிலத்தடி நீர் ஆதாரம் உள்ள இடங்களின் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதற்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகம், 1.98 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.
இந்த நிதியில், சென்னையைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள தேசிய தொலை உணர்வு மைய ஆலோசனையின்படி, நிலத்தடி நீர் புவியியல் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
ஜி.ஐ.எஸ்., எனப்படும் தொலை உணர்வு மற்றும் புவி தகவல் தொழில்நுட்பம் வாயிலாக, வரைபடம் துல்லியமாக தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தமிழக குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாவட்ட வாரியாக நிலத்தடி நீர் இருப்பிடத்தை அறிவதற்கான, 'அட்லஸ்' வரைபடத்தை, அண்ணா பல்கலையுடன் இணைந்து, குடிநீர் வாரியம் தயாரித்துள்ளது, நாட்டிலேயே இதுதான் முதல்முறை. இந்த வரைபடம் வாயிலாக பணிகள் எளிமையாக உள்ளன.
குறிப்பிட்ட இடத்திற்கு, 'எலக்ட்ரிக்கல் ரெசிஸ்ட்டிவிட்டி மீட்டர்' எடுத்துச் சென்று ஆய்வு செய்தால், ஒன்றரை மணி நேரத்தில் நிலத்தடி நீர் இருப்பின் ஆழம், மண் மற்றும் பாறை வகைகளை, துல்லியமாக அடையாளம் காண முடியும்.
நிலத்தடி நீரை இந்த தொழில்நுட்பத்தில் கண்டறிய, அரசு தொடர்பான துறைகளுக்கு, 4,200 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. தனியார் நிலங்களில் நிலத்தடி நீர் கண்டறிய, அரசு அனுமதி வழங்கவில்லை.
அனுமதி வழங்கினால், தனியார் தொழிற்சாலைகள், குடியிருப்புகளுக்கு தேவையான நிலத்தடி நீராதாரங்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இது அரசின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

