'ஹிந்திய நாம் எதிர்க்கவில்லை' எம்.பி.,க்களிடம் முதல்வர் விளக்கம்
'ஹிந்திய நாம் எதிர்க்கவில்லை' எம்.பி.,க்களிடம் முதல்வர் விளக்கம்
UPDATED : மார் 10, 2025 10:07 AM
ADDED : மார் 10, 2025 05:03 AM

சென்னை: ''ஹிந்தி திணிப்பை தான் நாம் எதிர்க்கிறோமே தவிர, ஹிந்தி மொழியையோ, அந்த மக்களையோ அல்ல. அதனால், ஹிந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் செய்ய வேண்டாம்,'' என, தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாக, எம்.பி.,க்கள் சிலர் கூறியதாவது:
நாம் நடத்திய அனைத்து கட்சிக் கூட்டம், இந்தியாவின் ஒட்டு மொத்த கவனத்தையும் நம்மை நோக்கி திருப்பி இருக்கிறது. தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்பட உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கும், அம்மாநில முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறேன்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும், நம் சார்பில், ஒரு அமைச்சர், ஒரு எம்.பி., இடம் பெற்ற குழுவினர் சென்று, நம் கருத்தை விளக்க வேண்டும். தொகுதி மறுவரையறை பிரச்னையில், நமக்கான உரிமையை பெற, இது ஒரு துவக்கமே.
நம் கோரிக்கைகள் முழுமையாக வெற்றி அடையும் வரை, இந்த போராட்டமும், முன்னெடுப்பும் தொடர வேண்டும்.
தொகுதி மறுவரையறை, நிதிப்பகிர்வு, மும்மொழி கொள்கை என, தொடர்ச்சியாக நம்மை பா.ஜ., அரசு வஞ்சிக்கிறது. இவற்றில், தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்க, அனைத்து எம்.பி.,க்களும் ஒன்றுபட்டு செயலாற்றிட வேண்டும்.
தொகுதி மறுவரையறை என்பது, தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்னை அல்ல; தமிழகத்தின் பிரச்னை. பல மாநிலங்களின் பிரச்னை; எனவே, தி.மு.க., - எம்.பி.,க்கள், அனைத்து எம்.பி.,க்களையும் ஒருங்கிணைத்து, டில்லியில் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
டில்லியில், தமிழக எம்.பி.,க்களின் கூட்டத்தை நடத்தி, அவர்களின் கருத்துகளையும் கேட்டு செயலாற்றிட வேண்டும். மும்மொழி கொள்கை பிரச்னையில், நம் வாதங்களை மிக எச்சரிக்கையாக வைக்க வேண்டும்.
ஹிந்தி திணிப்பை தான் நாம் எதிர்க்கிறோமே தவிர, ஹிந்தி மொழியையோ, அந்த மக்களையோ அல்ல. அதனால், ஹிந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் செய்ய வேண்டாம்.
தமிழகத்தில் இரு மொழி கொள்கை வழியே அடைந்திருக்கும் வளர்ச்சியை பாருங்கள். உலகம் முழுக்க, தமிழக இளைஞர்கள் பெரிய பொறுப்புகளில் இருப்பதை கவனியுங்கள் என, அவர்களும் நம் தரப்பு நியாயத்தை புரிகிற மாதிரி பேசுங்கள்.
ஹிந்தி படிக்கவில்லை என்றால், நிதி தர மாட்டோம் என்று சொல்வது, சர்வாதிகாரம் இல்லையா என்பது தான் நம் கேள்வியாக இருக்க வேண்டும்.
பார்லிமென்ட் கூட்டம் நடக்கும் போது, தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும், தவறாமல் சபையில் இருக்க வேண்டும். மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், மக்களின் நலனுக்காகவும், தி.மு.க., - எம்.பி.,க்கள் இருக்கின்றனர் என்ற எண்ணத்தை, மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசியதாக அவர்கள் கூறினர்.