அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி கவனம் வேண்டும்!ஏனோ காணோம் வளர்ச்சி
அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி கவனம் வேண்டும்!ஏனோ காணோம் வளர்ச்சி
ADDED : மே 11, 2024 02:24 AM

கோவை:கோவை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தரத்திலும், தேர்ச்சி சதவீதத்திலும் முன்னேற்றம் கண்டு இருந்தாலும், அரசு பள்ளிகளின் செயல்பாடுகளில் பெரியளவில் முன்னேற்றம் இல்லை. நடப்பாண்டு தேர்வில், 89.10 சதவீத தேர்ச்சியை கோவை அரசு பள்ளிகள் பெற்றுள்ளன.
கோவை மாவட்டத்தில் 196 அரசுப் பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்றன. இதில், 34 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசுப் பள்ளிகளில் இருந்து 12 ஆயிரத்து 148 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 10 ஆயிரத்து 824 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் வாயிலாக, 89.10 சதவீத தேர்ச்சி அரசுப் பள்ளிகள் பெற்றுள்ளன. 34 பள்ளிகள் சென்டம் பெற்ற நிலையில், 90 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகளில், 42 பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.
அரசுப் பள்ளிகளில் இருந்து, 100 சதவீத தேர்ச்சி பெற்ற பெரும்பாலான பள்ளிகளில் குறைவான எண்ணிக்கை கொண்ட மாணவர்களே, தேர்வில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதுஇப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, கற்றல் கற்பித்தல் தவிர்த்த கூடுதல் பணிச்சுமை மற்றும் 'ஆப்சன்ட்' மாணவர்களால் தேர்ச்சி சதவீதம் குறைவதாக, ஆசிரியர்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.
கோவையில் அரசுப் பள்ளிகள் தவிர்த்து, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 91.18 சதவீத தேர்ச்சியும், மாநகராட்சிப் பள்ளிகள் 89.97 சதவீத தேர்ச்சியும், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் 91.3 சதவீத தேர்ச்சியும், பழங்குடியின நலத் துறை கீழ் செயல்படும் பள்ளிகள் 94.64 சதவீத தேர்ச்சியும், நகராட்சிப் பள்ளிகள் 83.48 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பாலமுரளி கூறுகையில், ''அரசுப் பள்ளிகளில் கடந்தாண்டை காட்டிலும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. பள்ளிகள் வாரியாக, வட்டாரம் வாரியாக மதிப்பெண் குறைந்த பள்ளிகளில் விளக்கம் கேட்கப்படும்.
மதிப்பெண் குறைந்ததற்கும், தோல்விகளுக்கும் காரணம் அறிந்து, ஆண்டு துவக்கம் முதலே பயிற்சி அளிக்கப்படும்.
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, ஜூலை மாதத்தில் துணைத் தேர்வு நடைபெறவுள்ளது. மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். எவ்வித மனஅழுத்தமும் இன்றி, துணைத் தேர்வுக்கு தயாராகலாம்,'' என்றார்.