3,071 பஸ் ஆர்டர் கொடுத்தோம் 1,796 வந்து விட்டன: அரசு விளக்கம்
3,071 பஸ் ஆர்டர் கொடுத்தோம் 1,796 வந்து விட்டன: அரசு விளக்கம்
ADDED : ஆக 27, 2024 01:15 AM

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில், மூன்று ஆண்டுகளில், 1,798 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் வெளியிட்ட அறிக்கை:
ஒவ்வொரு பட்ஜெட்டிலும், புதிய பஸ்கள் வாங்க, ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை, தி.மு.க., அரசு ஒதுக்குகிறது. ஆனால், மூன்று ஆண்டுகளில், 892 பஸ்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன.
தொடர்கதை
அரசு பஸ்கள் ஆங்காங்கே பழுதாகி நிற்பதும், ஓடிக் கொண்டிருக்கும் போதே, அதன் பாகங்கள் கழன்று விழுவதும், தொடர் கதையாகி வருகிறது. பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இதுவரை ஒரு மின்சார பஸ் கூட வாங்கப்படவில்லை. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி எங்கே சென்றது என்ற கேள்வி எழுகிறது. நிர்வாக சீர்கேடுகளை களைவதோடு, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தி, உடனடியாக புதிய பஸ்களை அரசு வாங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், 1,000 புதிய பஸ்கள் கொள்முதல் செய்ய, 420 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பணி முடிந்து, 833 பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. 2023 - 24ம் நிதியாண்டில், 3,000 புதிய பஸ்கள் கொள்முதல் செய்ய, 1,535.89 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
டீசல் பஸ்கள்
இதில், 503 புதிய பஸ்கள் நவம்பருக்குள் வரும். மீதமுள்ள, 2,544 பஸ்கள் அடுத்த ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும்.
ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியோடு, 2,166 டீசல் பஸ்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதில், 552 தாழ்தள பஸ்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு, 59 தாழ்தள பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மீதமுள்ள, 493 பஸ்கள், வரும் நவம்பரில் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வரும்.
உலக வங்கி நிதி உதவியுடன், மாநகர போக்குவரத்து கழகத்துக்கு, 500 மின்சார பஸ்கள் இயக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணி ஆணை வழங்கப்படும்.
இம்மாதம் 23ம் தேதி வரை, 3,071 புதிய பஸ்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு, இதுவரை, 1,796 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.