பா.ஜ.,வுடன் ராமதாஸ் கைகோர்த்த மர்மம் என்ன? தர்மபுரி பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி
பா.ஜ.,வுடன் ராமதாஸ் கைகோர்த்த மர்மம் என்ன? தர்மபுரி பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி
ADDED : மார் 30, 2024 12:23 AM

தர்மபுரி:''சமூகநீதி பேசும் ராமதாஸ், சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.,வுடன் கை கோர்த்த மர்மம் என்ன?'' என, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் தடங்கத்தில், தர்மபுரி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் மணி, கிருஷ்ணகிரி காங்., வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நான் பெரிதும் மதிக்கும் ராமதாஸ் தற்போது எங்கே இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியும். சமூகநீதி பேசும் ராமதாஸ் எப்படி பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தார் என்பதில் தங்கமலை ரகசியம் இல்லை; அனைவருக்கும் தெரியும்.
இடஒதுக்கீடு
தர்மபுரி மக்களுக்கும், அவர்கள் கட்சியினருக்கும் அவர் ஏன் அங்கு சென்றார் என்பது தெரியும். அவர் மனமில்லாமல் ஏன் அங்கு சென்றார் என்பதை, இதற்கு மேல் நான் விளக்கமாக சொல்ல தேவையில்லை.
கடந்த 1987ல் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக்காக போராடிய போது, அப்போதைய அ.தி.மு.க., அரசு செய்யவில்லை. பின், 1989ல் கருணாநிதி முதல்வரான 43 நாட்களில், வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்தார்.
வன்னியர் சங்கத்தினர் மேல் போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்றார். உயிரிழந்த, 21 பேரின் குடும்பத்திற்கும், 3 லட்சம் ரூபாய் கருணை தொகை கொடுத்தவர் கருணாநிதி. இன்று வரை அந்த குடும்பங்கள், 3,000 ரூபாய் பென்ஷன் பெறுகின்றனர்
சமூக நீதி தியாகிகளான அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நான் வாக்குறுதி கொடுத்தேன். இன்றைக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
கோனேரிகுப்பத்தில் நடந்த வன்னியர் சங்க வெள்ளி விழா மாநாட்டிற்கு, கருணாநிதியை அழைத்தார் ராமதாஸ்.
உயிர் பலி
அப்போது அவர் பேசுகையில், '1987 முதல் இட ஒதுக்கீட்டிற்காக நாங்கள் போராடினோம். 21 உயிர்களை பலி கொடுத்ததை தவிர ஒன்றும் நடக்கவில்லை. அன்றைய அ.தி.மு.க., முதல்வரை பார்க்கவே முடியவில்லை.
ஆனால், கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், இட ஒதுக்கீடு கிடைத்தது. உங்களுக்கு நன்றி, இந்த சமுதாயம் என்றென்றும் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கும்' என்றார்.
மேலும், 'நீங்கள் மட்டும், 20 சதவீத இட ஒதுக்கீடு தரவில்லை என்றால், கூலி வேலை செய்துவிட்டு, ஓட்டு மட்டும் போடும் ஒரு சமுதாயமாக இந்த ஒடுக்கப்பட்ட சமுதாயம் இருந்திருக்கும்' எனவும் பேசினார். அதை மாற்றிய பெருமை தி.மு.க.,வை சேரும்.
ராமசாமி படையாச்சியாருக்கு, சென்னையில் சிலை வைக்க வாழப்பாடி ராமமூர்த்தி, -வன்னிய அடிகளார் உள்ளிட்டோர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
சென்னை கிண்டியில் அவருக்கு சிலை அமைத்தவர் கருணாநிதி. அந்த நிகழ்ச்சியில், சென்னை மேயராக நானும் கலந்து கொண்டேன். சமூகநீதி பேசும் ராமதாஸ், சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.,வுடன் கை கோர்த்த மர்மம் என்ன?
பா.ம.க., வலியுறுத்தும் ஒரு கொள்கைக்கு கூட ஆதரவு தெரிவிக்காத, அதற்கு முற்றிலும் நேர் எதிரான கொள்கை கொண்டது தான் பா.ஜ., கட்சி. இது, மூத்த தலைவரான ராமதாசுக்கு தெரியாதா?
நான் மட்டும் அல்ல; மனசாட்சி உள்ள பா.ம.க., தொண்டர்கள் கூட இதை ஜீரணிக்க முடியாமல் வேதனையோடு இருக்கின்றனர்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திய போது, நாட்டில் திட்டமிட்டு எப்படியெல்லாம் கலவரம் செய்தது, சமூக நீதிக்காக போராடிய வி.பி.சிங் ஆட்சியை பா.ஜ., கவிழ்த்தது.
இப்போதும், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களின் இட ஒதுக்கீட்டை முழுமையாக, 'க்ளோஸ்' செய்ய எவ்வளவு படுபாதகங்களை பா.ஜ., செய்கிறது. அதை, ராமதாஸ் மறந்துவிட்டாரா?
முட்டுக்கட்டை
பா.ம.க., சார்பில் வெளியான தேர்தல் அறிக்கையில், ராமதாஸ் நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்கிறார்.
பிரதமர் மோடி தன் ஆட்சியில் இதை ஏன் செய்யவில்லை என கேட்டாரா? தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கேரண்டி கொடுத்தாரா? மோடியிடமோ, அமித்ஷாவிடமோ அதற்கான உத்தரவாதத்தை பெற்றாரா?
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடாமல் முட்டுக்கட்டை போட்டதே பா.ஜ., தான். ஆனால், இந்திய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு வாக்குறுதி கொடுத்த ஒரே தேசிய கட்சி காங்., தான். இது குறித்து செல்லும் இடங்களில் எல்லாம் ராகுல் பேசுகிறார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதன் அதிகாரம், மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது. மாநில அரசு சர்வே தான் எடுக்க முடியும். இதெல்லாம் தெரிந்தும் இந்த அரசியலை ராமதாஸ் நடத்துகிறார். அவர் மேல் உள்ள மரியாதையால், இதற்கு மேல் நான் பேசவில்லை.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

