கோவிந்தராஜருக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை?
கோவிந்தராஜருக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை?
ADDED : மே 10, 2024 11:38 PM
சென்னை:'சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னிதிக்கு, பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னிதிக்கு, பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதேநேரத்தில், பிரம்மோற்சவம் நடத்த அனுமதி கோரி, எம்.என்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இம்மனுக்கள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, எம்.என்.ராதாகிருஷ்ணன் சார்பில் வழக்கறிஞர் சி.கனகராஜ் ஆஜராகி, “கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், கடைசியாக 1849ல் பிரம்மோற்சவம் நடத்தப்பட்டது.
“பின், சைவ, வைணவ பிரிவினர் இடையேயான மோதல், பொது தீட்சிதர்கள் எதிர்ப்பால், பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை,” என்றார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ், “கோவில் நுழைவு வாயில்களை திறப்பது தொடர்பாக, 1920ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பிரம்மோற்சவம் குறித்து குறிப்பிடப்படவில்லை என்பதால், கோவிந்தராஜ பெருமாள் கோவில் சன்னிதியில் பிரம்மோற்சவம் நடத்த முடியாது.
“பிரம்மோற்சவம் நடத்துவது மரபு விழாவா என்பது குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கடந்த, 400 ஆண்டுகளுக்கும் மேலாக பிரம்மோற்சவம் நடக்கவில்லை. இதுவரை இல்லாத புதிய நடைமுறையை கொண்டு வர, அரசுக்கு அதிகாரமில்லை,” என்றார்.
அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, “400 ஆண்டுகளாக நடைபெறாத பிரம்மோற்சவம் இப்போது நடத்தப்பட வேண்டும். உரிமையியல் நீதிமன்றம் பிரம்மோற்சவம் நடத்த எந்த தடையும் விதிக்கவில்லை.
“அதன்படியே, பிரம்மோற்சவம் நடத்த அனுமதியளித்து, அறநிலையத்துறை இணை கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்கள் பிரம்மோற்சவம் நடத்த கோரியுள்ளனர்,” என்றார்.
பொது தீட்சிதர்கள் சார்பில், வழக்கறிஞர் ஹரிசங்கர் ஆஜராகி, “மரபு விழாக்களாக இருந்தால், எந்த ஆட்சேபமும் இல்லை. பிரம்மோற்சவம் நடத்துவதால், நடராஜர் கோவிலின் ஆறு கால பூஜைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும்,” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை உள்ளது' என, கேள்வி எழுப்பினர்.
மேலும், இந்த விவகாரத்தில் மரபு, சட்ட விதிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால், வழக்கின் விசாரணையை ஜூன் 24க்கு தள்ளிவைத்தனர்.