ADDED : பிப் 23, 2025 05:21 AM
அவனியாபுரம் : ''மத்திய அரசுக்கு நாங்கள் வரி வழங்குவதை நிறுத்த ஒரு நொடி போதும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அந்த நொடி எந்த நொடி,'' என, மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
அவர் கூறியதாவது: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஹிந்தி கற்றுக் கொடுப்பதை ஆரம்பத்திலேயே எதிர்த்திருக்கலாம். ஆனால் அப்போது எதிர்க்காமல், தற்போது தேர்தல் வருவதால் இதை வைத்து அரசியல் செய்கின்றனர். ஹிந்திதான் இந்தியாவின் மொழி என்றால் என்னுடைய மொழி என்னாயிற்று.
பாகிஸ்தான், பங்களாதேஷ் பிரிந்ததற்கு காரணம் மொழி பிரச்னை தான். மும்மொழி கொள்கையால் தமிழ் படிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்ற சூழல் வரும் போது எனது மொழி என்னாகும்.
அந்தந்த மாநில மொழிக்கு முன்னுரிமை கொடுத்தால் தான் மாநிலம் வளர்ச்சி பெறும். இல்லம் தேடி கல்வித் திட்டமானது புதிய கல்விக் கொள்கை திட்டத்தில் தான் வருகிறது.
அந்த காலத்திலிருந்து மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்கள் தமிழ் இனம் தான். பார்லிமென்ட்டில் சமஸ்கிருத மொழியில் கல்வெட்டு வைக்கிறார்கள். மொழியை வைத்து பிரிப்பவர்கள் நாங்களா நீங்களா. மத்திய அரசுக்கு நாங்கள் வரி வழங்குவதை நிறுத்த ஒரு நொடி போதும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அந்த நொடி எந்த நொடி. மாநில வரிதான் மத்திய அரசுக்கான நிதி. அதை திருப்பித் தர மத்திய அரசு மறுக்கிறது, என்றார்.

