தி.மு.க., மதுபான ஊழல் குறித்து அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் விசாரணை: முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ உறுதி
தி.மு.க., மதுபான ஊழல் குறித்து அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் விசாரணை: முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ உறுதி
ADDED : ஜூலை 02, 2024 09:42 PM

மதுரை : ''அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க.,வின் மதுபான கொள்முதல் ஊழல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரும் மீதும் விசாரித்து நடவடிக்கை எடுப்போம்,'' என, மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
அவர் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்கப்படவில்லை. கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதி தரவில்லை.
கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஏன் செல்லவில்லை. துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை கோரினார். மடியில் கனமில்லை என்றால் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடலாமே.
சட்டசபை கண்ணியம் காக்க கள்ளச்சாராய மரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து வெளியேறினோம். சட்டையை கிழித்துக்கொண்டு வெளியேறவில்லையே. அரசு விற்கும் மதுவில் 'கிக்' இல்லை என அமைச்சர் துரைமுருகன் பேசியது அவர் பதவிக்கு அழகில்லை. தி.மு.க., ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்பதற்கு பதில் கள்ளச்சாராய ஆட்சி, போதை பொருள் ஆட்சி எனலாம்.
தி.மு.க., அரசு மதுபானங்கள் கொள்முதலில் வெளிப்படை தன்மை இல்லை என தணிக்கைத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் எப்படி கெஜ்ரிவால் சிறையில் உள்ளாரோ அதேபோல ஸ்டாலினும் சிறைக்கு செல்வார்.
பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என கேட்கும் காங்., எதிர்கட்சி தலைவர் ராகுல், முதல்வர் ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை எனக் கேட்கவில்லை. 16 பேர் உயிரிழந்தாலே சம்பவ இடத்திற்கு பிரதமர் நேரில் வர வேண்டும் என விதி உள்ளது. கள்ளக்குறிச்சிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வந்திருக்க வேண்டும்.
பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளிநாட்டில் சென்று கல்வி கற்க உள்ளதற்கு என் வாழ்த்துக்கள்.
நன்றாக கல்வி கற்று தமிழகத்திற்கு வர வேண்டும்.
தலைவர்களை பற்றி எப்படி பண்புடன் பேச வேண்டும் என கற்று வரவேண்டும். நல்ல தலைவர்கள் இல்லை என நடிகர் விஜய் கூறியதன் அர்த்தம் வேறு. மாணவர்கள் அரசியலுக்கு வராமல் ஒதுங்கி சென்று விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் அப்படி சொல்லியுள்ளார் என்றார்.