முன்னாள் எஸ்.பி.,யை மிரட்டிய தி.மு.க., புள்ளி யார்: அண்ணாமலை
முன்னாள் எஸ்.பி.,யை மிரட்டிய தி.மு.க., புள்ளி யார்: அண்ணாமலை
ADDED : ஜூன் 22, 2024 01:20 AM
சென்னை:'கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி., மோகன்ராஜை மிரட்டிய தி.மு.க., புள்ளிகள் யார் என்பதை விசாரித்து, அவர்கள் மீது, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.,யாக இருந்தவர் மோகன்ராஜ். இவர், 2023 ஜனவரியில் பொறுப்பேற்றதில் இருந்தே, கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருந்தார்.
அதனால், பணி ஓய்வுக்கு எட்டு மாதங்கள் இருக்கும்போதே, விருப்ப ஓய்வு கேட்டு, கடந்த டிச., மாதம் ஓய்வு பெற்றார். அரசியல் அழுத்தம் காரணமாகத் தான், அவர் விருப்ப ஓய்வில் செல்கிறார் என்ற குற்றச்சாட்டு, அப்போதே எழுந்தது.
ஆனால், அதற்கு காவல் துறை சார்பில் மழுப்பலான ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. மோகன்ராஜ், அரசியல் அழுத்தம் காரணமாகத் தான் விருப்ப ஓய்வுபெற்றார் என்பதை, தற்போதைய கள்ளச்சாராய மரணங்கள் உறுதிப்படுத்துகின்றன.
'தினமலர்' நாளிதழில், மோகன்ராஜ் ஓய்வு பெற எட்டு மாதங்கள் இருக்கும்போதே விருப்ப ஓய்வில் சென்றதற்குக் காரணம், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்தும், அவரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று, அந்த பகுதி தி.மு.க., முக்கியப்புள்ளிகள் மிரட்டியுள்ளதாகவும், காவல் துறை தலைமையும் கண்டுகொள்ளவில்லை என்பதால், வேறு வழியின்றி விருப்ப ஓய்வில் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
உண்மையிலேயே முதல்வர் ஸ்டாலினுக்கு, மக்கள் மீது அக்கறை இருக்குமேயானால், முன்னாள் எஸ்.பி., மோகன்ராஜை மிரட்டிய தி.மு.க., புள்ளிகள் யார் என்பதையும், இதை அறிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்த காவல் துறை அதிகாரிகள் யார் என்பதையும் விசாரித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையேல், எல்லாம் தெரிந்திருந்தும் தன் கட்சியினரை காப்பாற்ற, பொதுமக்களை பலி கொடுத்த முதல்வர் என்பதாகத் தான் எடுத்துக் கொள்ள முடியும்.
அதற்கு முதற்படியாக, நாங்கள் ஏற்கனவே கூறியது போல், 50 உயிர்கள் பறிபோனதற்கு பொறுப்பேற்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
ஸ்டாலின் மக்களுக்கான முதல்வரா அல்லது தி.மு.க.,வினருக்கு மட்டுமா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

