திருவண்ணாமலையில் வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது?
திருவண்ணாமலையில் வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது?
ADDED : செப் 12, 2024 11:27 PM
சென்னை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரம் எதிரே, 6.40 கோடி ரூபாய் மதிப்பில், அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட, அறநிலையத் துறை திட்டமிட்டது. பொதுப்பணித் துறை, கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது.
புதிதாக மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளால், கோவிலின் ராஜகோபுரத்துக்கு சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் கட்டுமானப் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும், சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் உட்பட சிலர், உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வில் முறையிட்டனர்.
இதையடுத்து, வணிக வளாக கட்டுமானப் பணிக்கு தடை விதித்து, கடந்த ஆண்டு நவம்பரில் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.
அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், ''வணிக வளாகம், ராஜகோபுரத்தின் பார்வையை மறைக்காது. கட்டப்படும் கடைகளில், பக்தர்கள் வசதிக்காக பூஜை பொருட்கள், பூக்கள் மட்டுமே விற்கப்படும்,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் அதிகம் வருகின்றனர். திருவிழா நாட்களில், லட்சக்கணக்கில் வருகின்றனர்.
'கோவிலுக்குள் பக்தர்கள் எளிதாக சென்றுவர வேண்டும். கோவிலுக்காக, தேர் நிறுத்துவதற்காக என்றால் சரி; வணிக நோக்கத்துக்கு இந்த இடத்தை பயன்படுத்த வேண்டுமா' என்று கேட்டனர்.
பின், அறநிலையத் துறை வழக்கறிஞரிடம், வணிக வளாகம் கட்டும் திட்டத்தை, ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை, 19ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

