ஸ்டாலினுக்கு நெருக்கமானவருக்கு அரசு பதவி கொடுப்பதா: அண்ணாமலை
ஸ்டாலினுக்கு நெருக்கமானவருக்கு அரசு பதவி கொடுப்பதா: அண்ணாமலை
ADDED : ஜூலை 25, 2024 11:19 PM
சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனராக, முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவரான ஹசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டு இருக்கிறார். தி.மு.க., ஆட்சிக்கு வரும் முன், அக்கட்சி இளைஞரணி துணை செயலராக இருந்த அவரை, ஆட்சிக்கு வந்த உடன், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக நியமித்தனர்.
தற்போது, மூன்று ஆண்டுகள் கடந்ததும், அவரை துறை இயக்குனராக நியமித்துள்ளனர். ஜின்னாவை, இந்த பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே, கடந்த ஆறு மாதங்களாக இயக்குனர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல் இருந்திருக்கிறார் ஸ்டாலின்.
தமிழகத்தில் எத்தனையோ திறமை வாய்ந்த மூத்த வழக்கறிஞர்கள், குற்ற வழக்குகள் துறை இணை, துணை இயக்குனர்கள் என, தகுதி வாய்ந்தவர்கள் இருக்கும் போது, ஒட்டு மொத்த குற்ற வழக்குகள் துறை தலைவர் பொறுப்புக்கு தங்களுக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக, அரசு பதவி வழங்கியிருப்பது, தி.மு.க.,வின் அதிகார துஷ்பிரயோகம்.
தமிழகம் முழுதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதும், பல குற்றங்களில் தி.மு.க.,வினருக்கு தொடர்பு இருப்பதும் வெளிப்படையாக தெரிய வருகிறது. குற்ற வழக்குகளை கையாளும் முக்கிய பொறுப்பில், இளைஞரணி துணை செயலராக இருந்த ஒருவரை நியமித்திருப்பது, தி.மு.க.,வின் நோக்கம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
முதல்வர் ஸ்டாலின் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்றால், அவரது கட்சியில் முக்கிய பதவிகளை கொடுக்கலாம். அதை விடுத்து பொறுப்பு மிக்க அரசு பதவிகளில், இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்வதை கண்டிக்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

