பட்டாசு தொழிலை காப்பாற்ற உதவுவேன்: சுரேஷ்கோபி உறுதி
பட்டாசு தொழிலை காப்பாற்ற உதவுவேன்: சுரேஷ்கோபி உறுதி
ADDED : ஆக 13, 2024 10:51 PM

சிவகாசி:''தமிழக மக்கள், பண்பாட்டின் மீது பாசம் கொண்ட மலையாளியாக உள்ளேன். அந்த வகையில் சிவகாசியின் பட்டாசு தொழிலுக்காக என்றைக்கும் வாதாடுவேன்,'' என, சிவகாசியில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்தார்.
புதிய யுத்திகள்
அவர் மேலும் கூறியதாவது:
மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தலின்படி சிவகாசி பட்டாசு தொழில் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதன் வாயிலாக புதிய தலைமுறை பட்டாசு உற்பத்தி, சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை புதிய யுத்திகளை புகுத்த முடியும் என எதிர்பார்க்கிறேன். பட்டாசு தொழில் வாயிலாக சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும். பட்டாசு தொழிலுக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவை முக்கியம்.
கடந்த பிப்ரவரியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் அதிக தொழிலாளர்கள் இறந்தனர். பட்டாசு ஆலை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்து எப்படி நடந்தது என்பதற்கான முழுமையான காரணம் கண்டுபிடிக்கவில்லை.
கூடுதல் முக்கியத்துவம்
விசாரணைக்குப் பின், அது தொடர்பான விபரங்கள் வெளி வரும். சில விஷயங்களுக்கு கால நேரம் தேவைப்படுகிறது. நான் வந்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதன் வாயிலாக பட்டாசு தொழிலுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும்.
தமிழகத்தில் பல்வேறு விதமான நெருக்கடிகளை சந்தித்து வரும் பட்டாசு தொழில் சிக்கல் எதுவும் இன்றி தொடர வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுக்கும். அமைச்சர் என்ற முறையில் என்னால் ஆன அனைத்து உதவிகளையும் பட்டாசு தொழிலை நம்பி இருப்போருக்கு செய்வேன்.
இவ்வாறு சுரேஷ் கோபி கூறியுள்ளார்.

