ஆசிரியரை கொன்று வீசிய பெண், வாலிபருடன் கைது நெருங்கி பழகியதை வீடியோ எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்
ஆசிரியரை கொன்று வீசிய பெண், வாலிபருடன் கைது நெருங்கி பழகியதை வீடியோ எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்
ADDED : ஜூன் 04, 2024 01:38 AM

கடலுார்: அரியலுார் மாவட்டம், ஆண்டிமடத்தைச் சேர்ந்தவர் விக்டர், 49. கடலுார், கம்மியம்பேட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து, எட்டு ஆண்டுகளாக, திருப்பாதிரிப்புலியூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் 18ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை; எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் பாத்திமாமேரி, கடந்த, 28ம் தேதி அளித்த புகாரின் படி, திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, விக்டரின் மொபைல் போனிற்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தனர்.
அதில், ஆண்டிமடத்தை சேர்ந்த திருமணமாகாத, 21 வயது பெண்ணிடம் அடிக்கடி பேசியதும், அந்த பெண் சில ஆண்டுகளாக பெற்றோருடன் குறிஞ்சிப்பாடி, எல்லைக்கல் பகுதியில் வசித்து வருவதும் தெரிந்தது.
இந்நிலையில், விக்டர் வழக்கில் போலீசார் தேடுவதை அறிந்த அந்த பெண், அயன்குறிஞ்சிப்பாடியை சேர்ந்த உறவினர் தங்கராஜ் மகன் தட்சணாமூர்த்தி, 22, என்பவருடன் நேற்று முன்தினம் இரவு திருப்பாதிரிப்புலியூர் வி.ஏ.ஓ., உசேனிடம், ஆசிரியர் விக்டரை அடித்துக் கொலை செய்ததாக கூறி சரணடைந்தார்.
தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று, வி.ஏ.ஓ.,விடம் சரணடைந்த இருவரை பிடித்து விசாரித்தனர். போலீசார் கூறியதாவது:
விக்டருக்கும், அந்த பெண்ணிற்கும் பழக்கும் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகினர். அதை மொபைல் போனில் வீடியோ எடுத்து வைத்திருந்த விக்டர், அந்த பெண்ணிற்கு திருமண ஏற்பாடு செய்வதை அறிந்து, வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டினார்.
பாதிக்கப்பட்ட பெண், உறவினரான தட்சணாமூர்த்தியிடம் கூறினார். பின், இருவரும் சேர்ந்து விக்டரை கொலை செய்ய திட்டமிட்டனர்.
இதையடுத்து அந்த பெண், கடந்த 18ம் தேதி விக்டரை தன் வீட்டிற்கு வரவழைத்தார். அங்கு மறைந்திருந்த தட்சணாமூர்த்தி, அந்த பெண்ணுடன் சேர்ந்து விக்டரை இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கி கொலை செய்தார்.
பின், விக்டர் உடலை சாக்கில் மூட்டை கட்டி, நெய்வேலி வேலுடையான்பட்டு கோவில் அருகில் முட்புதரில் வீசினர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
அதையடுத்து, திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று காலை, விக்டர் உடல் வீசிய இடத்திற்கு சென்று, அங்கு, எலும்புக்கூடாக கிடந்த அவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தொடர்ந்து, தட்சணாமூர்த்தி மற்றும் அந்த பெண்ணை கைது செய்தனர்.