ADDED : ஜூலை 01, 2024 03:05 AM
சூலுார்: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், பால்ராஜ், 45, டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு பணி முடித்து வீட்டுக்கு செல்ல இருந்தார். அப்போது, பணிமனை அதிகாரிகள், 'வீட்டுக்கு செல்லக் கூடாது; தொடர்ந்து பணியாற்ற வேண்டும்' என, நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பால்ராஜ், டிப்போ முன்புறம் நின்று கொண்டு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். சக ஊழியர்கள் அவரை மீட்டனர். பிரச்னையை மூடி மறைக்க, அதிகாரிகள் அந்த டிரைவருடன் சமாதானம் பேசினர்.
போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகையில், 'கடந்தாண்டு இதே டிப்போவில் ஓட்டுனர் பணி நெருக்கடி காரணமாக தற்கொலைக்கு முயன்றார். தற்போது மீண்டும் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஓய்வு கொடுக்காமல் வேலை வாங்கும் நிர்வாகத்தின் செயலால் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.