துாத்துக்குடி கோவில் தெப்பத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலி
துாத்துக்குடி கோவில் தெப்பத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலி
ADDED : மே 14, 2024 07:03 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி நகரின் மையப் பகுதியில் சிவன் கோவில் என அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தெப்பக்குளத்தில் தற்போது தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. தெப்பக்குளத்தின் சுற்று சுவர்களில் அமர்ந்து சில வாலிபர்கள் பேசிக் கொண்டிருப்பது வழக்கம்.
இந்நிலையில், துாத்துக்குடி ஜெய்லானி தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி அசன் அலி, 43, என்பவர் நேற்று தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தெப்பக்குளத்தில் தவறி விழுந்தார். உயிருக்கு போராடிய அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். இருப்பினும், அவர் தண்ணீரில் மூழ்கினார்.
இதையெடுத்து, தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், ஆழ்கடலில் சென்று முத்து எடுக்க பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் இரண்டு நேரத்திற்கு மேலாக தீயணைப்பு துறை வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இருப்பினும், அசன் அலி இறந்த நிலையில் மீட்டகப்பட்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக துாத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

