10,000 ரத்த பரிசோதனை மையங்கள் புதிய அரசாணையால் மூடும் அபாயம்
10,000 ரத்த பரிசோதனை மையங்கள் புதிய அரசாணையால் மூடும் அபாயம்
ADDED : டிச 25, 2024 12:55 AM

சென்னை:'ரத்த பரிசோதனை மையங்கள் அமைந்துள்ள இடம் தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையால், 10,000க்கும் அதிகமான, சிறிய ரத்தப் பரிசோதனை மையங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன' என, பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.
இது குறித்து, சங்கத் தலைவர் காளிதாசன், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க செயலர் ரவீந்திரநாத் ஆகியோர் கூறியதாவது:
தமிழகத்தில் ரத்தப் பரிசோதனை மையங்களுக்கான இடவசதி தொடர்பாக, புதிய நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை, கடந்த மாதம், மக்கள் நல்வாழ்வுத் துறையால் வெளியிடப்பட்டது.
அதில், நகர்புறத்தில் உள்ள, ரத்த பரிசோதனை மையங்கள், ஜெனடிக் பரிசோதனை நிலையங்கள், நோய் குறியியல் பரிசோதனை நிலையங்கள் போன்றவற்றுக்கு, 500 முதல் 700 சதுர அடி; கிராமப்புறத்தில் 300 சதுர அடி பரப்பளவு இடம் இருக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மரபியல் ரத்தப் பரிசோதனை மையங்கள், நுாற்றுக்கும் குறைவாவே உள்ளன. 'எக்ஸ்ரே' பரிசோதனை மையங்கள், 20 சதவீதம் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 80 சதவீதம், ரத்தப் பரிசோதனை மையங்களாக உள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை, சிறிய ரத்தப் பரிசோதனை மையங்களாக உள்ளன. பெரும்பாலான ஏழை மக்கள், குறைந்த கட்டணத்தில், சர்க்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து கொள்கின்றனர்.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள, இடவசதி குறித்த அரசாணை, பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாகவும், 10,000க்கும் அதிகமாக சிறிய ரத்தப் பரிசோதனை மையங்களை ஒழித்து கட்டுவதற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளன.
சிறிய ரத்தப் பரிசோதனை மையங்களை மூட, தி.மு.க., அரசு முயல்வது சரியானது இல்லை.
எனவே, புதிய அரசாரணையை, தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். நகர்ப்புறங்களில் உள்ள ரத்தப் பரிசோதனை மையங்களுக்கு, குறைந்தபட்சம் 150 சதுர அடி, கிராமப்புறங்களில், 100 சதுர அடி பரப்பளவு என, நிர்ணயிக்க வேண்டும்.
எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, ஜன., 19ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

