தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மூன்றாண்டுகளில் 12,000 கோப்புகளில் கையெழுத்து: ஸ்டாலின் பெருமிதம்

மூன்றாண்டுகளில் 12,000 கோப்புகளில் கையெழுத்து: ஸ்டாலின் பெருமிதம்

மூன்றாண்டுகளில் 12,000 கோப்புகளில் கையெழுத்து: ஸ்டாலின் பெருமிதம்


ADDED : ஜன 12, 2025 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2025 04:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''நிச்சயமாக சொல்கிறேன்; ஏழாவது முறையும், தி.மு.க., அரசு தான் அமையப் போகிறது,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலுரை:

கருணாநிதி எழுதிய, 'பராசக்தி' பட வசனத்தை போல, இந்த சட்டசபை, கவர்னரை பொறுத்தவரை சில ஆண்டுகளாக விசித்திரமான காட்சிகளை காண்கிறது. கவர்னர் உரையாற்ற வருகிறார்; ஆனால், உரையாற்றாமலேயே சென்று விடுகிறார். அதனால் தான் கவர்னரின் செயல் சிறுபிள்ளைதனமானது என்று, நான் சொன்னேன்.

2021ம் ஆண்டு, இதே கவர்னர் தன் முதல் உரையை முழுமையாக வாசித்தார்; எதையும் மாற்றவில்லை. இந்த மூன்று ஆண்டுகளாக, என்னென்ன அபத்தமான காரணங்களை எல்லாம் சொல்லி, படிப்பதை தவிர்த்தார்.

சபை துவங்கும் போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், சபை நடவடிக்கைகள் முடிந்த பின் தேசிய கீதம் ஒலிப்பதும் தான், காலம் காலமாக பின்பற்றப்படும் மரபு.

இந்த விளக்கத்தை சொன்ன பின்னும், கவர்னர் உரையாற்ற மறுக்கிறார்; தவிர்க்கிறார். தமிழகம் வளர்ந்து வருவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

முதல்வராக இருக்கும் நான் சாதாரணமானவனாக இருக்கலாம். ஆனால், இந்த சட்டசபை, நுாற்றாண்டு வரலாறு உடையது. கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளால் உருவான சபை.

இந்த சட்டசபையின் மாண்பை மதிக்காமல், மக்களது எண்ணங்களுக்கும் மதிப்பு தராமல், தமிழ்த்தாய் வாழ்த்தையே அவமானப்படுத்த துணிந்ததன் வாயிலாக, தான் வகிக்கும் பதவிக்கும், பொறுப்புக்கும் இழுக்கு ஏற்படுத்தும் காரியத்தை, அரசியல் உள்நோக்கத்துடன் கவர்னர் செய்வது, இந்த சபை இதுவரை காணாதது; இனியும் காணக்கூடாதது.

அவர் அரசியல் ரீதியாக எங்களை புறக்கணிப்பதை, நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. சமூக சீர்த்திருத்த இயக்கம், அரசியல் கட்சியாக மாறி, ஆறாவது முறையாக ஆட்சியை கைப்பற்றிய வரலாறு தி.மு.க.,வுக்கு தான் உண்டு.

நிச்சயமாக சொல்கிறேன், ஏழாவது முறையும் ஆட்சி அமைத்து, ஏற்றம் காணும் அரசாக, தி.மு.க., அரசு தான் அமையப் போகிறது. அதற்கு அடித்தளமாக ஆறாவது முறை ஆட்சி அமைந்த போது. இது விடியல் ஆட்சியாக அமையும் என்று சொன்னோம்.

மக்களால் புறக்கணிக்கப்பட்டு, இருட்டில் கிடக்கும் எதிர்க்கட்சிகள், 'விடியல் எங்கே' என்று கேட்கின்றன. விடியல் தரப்போவதாக சொன்னது மக்களுக்கு தானே தவிர, மக்களுக்கு எதிரானவர்களுக்கு அல்ல. விடியலை பார்த்தால், அவர்களுக்கு கண்கள் கூசத்தான் செய்யும்.

தமிழகம், நாட்டின் இரண்டாவது பொருளாதார மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் பெருகியதில், தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. தமிழகத்தில், 39,666 தொழிற்சாலைகள் உள்ளன. குஜராத்தில், 31,031, மஹாராஷ்டிராவில், 26,446 தொழிற்சாலைகளும் உள்ளன. மனித வளத்தை வளர்ப்பதில் மஹாராஷ்டிரா, குஜராத்தை விட தமிழகம் சாதனை படைத்துள்ளது.

போராட்டம் நடத்தும் உரிமை இல்லையென்று, சிலர் தவறான வாதங்கள் வைக்கின்றனர். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்தலாம் என்று சொல்பவன் நான். போராட்டங்களுக்கு உரிய காலத்தில் அனுமதி கேட்டால், நாங்கள் கொடுக்கிறோம்.

ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி தந்துள்ளோம். காவல் துறை சுதந்திரமாக செயல்படுகிறது. ரவுடியிசத்தில் ஈடுபடுகிறவர்கள் மீது தயவு தாட்சாண்யம் பார்க்காமல், நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதனால், ரவுடிகள் தொடர்புடைய கொலை சம்பவங்கள் குறைந்திருக்கின்றன. எங்கும் அமைதி நிலைநாட்டப்பட்டு வருகிறது; குற்றம் பெருமளவு தடுக்கப்பட்டு இருக்கிறது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்துள்ளோம். யாருக்கும் எந்த சலுகையும் தரப்படவில்லை.

பெரும்பாலான கொலைகள், குடும்ப பிரச்னை, காதல் விவகாரம், பணம் கொடுங்கல் வாங்கல், நில பிரச்னை, தனிபட்ட முன்விரோதம், வாய் தகராறு போன்ற காரணங்களால் நடக்கின்றன.

அரசியல் காரணங்கள், ஜாதிய கொலைகள், மத ரீதியான கொலைகள், ரவுடி கொலைகள் குறைக்கப்பட்டு உள்ளன. நாட்டில் பாதுகாப்பு மிகுந்த முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளில், பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டோம். சொல்லாத பல திட்டங்களையும் செயல்படுத்தி காட்டியிருக்கிறோம். இன்னும் சில பாக்கி இருக்கிறது. இந்த மூன்று ஆண்டுகளில், 12 ஆயிரம் கோப்புகளில், நான் கையெழுத்து போட்டுள்ளேன். இத்தனை கோப்புகளில் கையெழுத்திட்ட நான், இன்னும் சில கோப்புகளில் வேண்டுமென்றே கையெழுத்திடாமல் இருப்பேனா

'அரசுக்கு கருணை இருக்கிறது; ஆனால் நிதியில்லை' என்று, கருணாநிதி சொன்னார். அதே நிலையில்தான் நாம் இருக்கிறோம். பல்வேறு திட்டங்களை மிக மிக நெருக்கடியான சூழலில் தான் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.

அ.தி.மு.க., ஆட்சியின், 10 ஆண்டு கால பாதாளத்தில் இருந்து, தமிழகத்தை மீட்டெடுத்து இருக்கிறோம்.

மத்திய அரசிடம் இருந்து, ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் வர வேண்டிய, 2,152 கோடி ரூபாய் இன்னும் நிலுவையில் இருக்கிறது. 'பெஞ்சல்' புயல் நிரந்தர நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு, 6,675 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டும் என, மத்திய அரசிடம் கேட்டோம்; இதுவரை விடுவிக்கவில்லை. வீடுதோறும் குடிநீர் வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்துகிறது.

இந்த திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய, 4,142 கோடி ரூபாயில், இதுவரை, 732 கோடி ரூபாய் தான் வழங்கியுள்ளனர். நிதி இல்லாமல் திட்டங்களின் செயல்பாடு சுணங்கக்கூடாது என்பதற்காக, இந்த திட்டத்திற்கு நம்முடைய நிதியை செலவழிக்கிறோம்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us