கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை: ஐகோர்ட்டில் அறிக்கை
கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை: ஐகோர்ட்டில் அறிக்கை
ADDED : மார் 18, 2025 11:49 PM
சென்னை:தமிழகத்தில் நிலம் கையகப்படுத்தியதற்கு உரிய இழப்பீடு வழங்கும் உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி, 1,222 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ராணிப்பேட்டையில், 'பெல்' நிறுவனத்தின் ஆலை அமைப்பதற்காக கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்கவில்லை என, சந்திரசேகர், சேட்டு ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2017ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகம் முழுதும் நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்குகளில், இழப்பீடு வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தக் கோரிய வழக்கு விபரங்களை சமர்ப்பிக்கும்படி, 2018ல் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தமிழகம் முழுதும், 760 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, 'நிலத்தை பொது தேவைகளுக்காக கையகப்படுத்திய பின், இழப்பீடு கோரும் நில உரிமையாளர்களை, மத்திய, மாநில அரசுகள் பிச்சை பாத்திரத்துடன் நிற்க செய்து விட்டன' என, நீதிபதி வேதனை தெரிவித்திருந்தார்.
மேலும், இழப்பீடு கோரும் நிலுவை வழக்குகளின் தற்போதைய விபரங்களை தாக்கல் செய்யுமாறு, சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கும் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நேற்று, இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற பதிவுத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'தமிழகம் முழுதும், 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்காக, மொத்தம் 1,521.83 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது.
'இழப்பீட்டுத் தொகை வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி, 1,222 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல, புதுச்சேரியில், 35.78 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது.
'இந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி, 59 வழக்குகள் நிலுவையில் உள்ளன' எனக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, 'பெரும் தொகை இழப்பீடாக வழங்கப்பட வேண்டியுள்ளதால், இதற்கு தீர்வு காண, அரசு தலைமை வழக்கறிஞர் உதவ வேண்டும்' எனக் கூறிய நீதிபதி, வரும் 21க்கு விசாரணையை தள்ளிவைத்தார்.